உதயநிதி ஆப்சென்ட் ஆன முதல் கூட்டம்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்கிழமை சிண்டிகேட் குழு கூட்டம் பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாடத்திட்ட மாற்றங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளன.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நியமிக்கப்பட்டார் . பொதுவாக, பல்கலைக்கழகங்களில் ஆட்சிமன்ற குழு என்று தனியாக இருக்கும்... அதன் உறுப்பினராக அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுவதும் வழக்கம்
அதன்படியே அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உதயநிதி நியமிக்கப்பட்டிருந்தார். அதேபோல, சிந்தனைச் செல்வன் ஆகியோரும் கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக ஈஸ்வரன், கணேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டார்கள்.

உதயநிதி ஆப்சென்ட்
அதன் முதல் கூட்டமும் இன்று நடைபெற்றது.. முதல் கூட்டம் என்பதால், அதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அவர் பங்கேற்கவில்லை... உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தி வந்ததால் அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

யார் யார்
இந்தக் கூட்டத்தில், உயர்கல்வி செயலாளர் கார்த்திகேயன்,தொழில்நுட்ப கல்வி இயக்குநர் லஷ்மி பிரியா ,தனியார் கல்லூரிகளின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சிண்டிகேட் உறுப்பினர்கான பனிமலர் கல்வி குழுமத்தின் செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் சின்னதுரை, ஆர் எம் கே கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் கிஷோர், கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி தலைவர் மலர்விழி, கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுகந்தி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அண்ணா பல்கலைக்கழகம்
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து துணைவேந்தர் வேல்ராஜ் கூறும்போது, "தமிழ்நாடு அரசினால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அரசாணைகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்படுத்துவதற்கு சிண்டிக்கேட் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

கல்லூரிகள் இணைப்பு
குறிப்பாக அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58இல் இருந்து 60ஆக உயர்த்தப்பட்டதற்கு இன்றைய சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குவது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாடத்திட்ட மாற்றங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. கல்வியியல் குழுவின் அனுமதியுடன் பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு அதன் பின்னர் முறைப்படி அனுமதி வழங்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

காலி பணியிடங்கள்
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும். பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பணி வரன்முறைப்படுத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன" இவ்வாறு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications