"2 மாங்காய்".. சென்னையை தட்டி தூக்கும் உதயநிதி.. 2 முக்கிய தலைகளுக்கு சான்ஸ்.. பக்கா பிளான்!
சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான சில நிர்வாகிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி.. டாஸ்மாக் பார்களை 6 மாதத்துக்குள் மூட வேண்டும்.. உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
சென்னை எப்படி?
ஏற்கனவே சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இந்த முறை பெண் மேயர் பதவி ஏற்க உள்ளார். இதனால் துணை மேயர் பதவி இந்த முறை ஆண் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 12-வது கட்ட பட்டியலை திமுக நேற்று வெளியிட்டது.
சென்னை எத்தனை?
மொத்தமாக 200 இடங்களில் 164 இடங்களில் சென்னையில் இந்த முறை திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். நேற்று வெளியிடப்பட்ட திமுக பட்டியலில், பெரம்பூர், ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், அண்ணாநகர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகள் அனைத்திற்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய பல முக்கிய புள்ளிகளுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாய்ப்பு
அதன்படி சென்னையில் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மதிமாறனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் திமுக எம்எல்ஏ மறைந்த ஜெ அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் பரிதி இளம் சுருதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது போக திருமலை பொன்னரங்கம், வசந்தி, மல்லிகா, அதியமான், சிவகுமார் போன்ற திமுக நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக புள்ளிகள் பலர் இந்த முறை திமுக சார்பாக வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
உதயநிதி
இதில் பலர் உதயநிதிக்கு நெருக்கமான நிர்வாகிகள். மாவட்ட அளவில் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கும் நிர்வாகிகள் பலருக்கு தேடிபிடித்து வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக உதயநிதி கேம்பை சேர்ந்த 2 சிற்றரசு, மதன்மோகன் இருவருக்கும் இந்த முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக இருக்கும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மதன் மோகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் உதயநிதிக்கு நெருக்கமான திமுக நிர்வாகி ஆவார்.
சிற்றரசு
அதேபோல் ஆயிரம் விளக்கு தொகுதியில் சிற்றரசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரில் ஒருவருக்கு சென்னையில் துணை மேயர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது உதயநிதிக்கு நெருக்கமான இரண்டு பேரில் ஒருவருக்கு துணை மேயர் பதவியும், இன்னொருவருக்கு வேறு முக்கியமான பதவியும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் சிற்றரசு துணை மேயர் ஆகும் வாய்ப்பு உள்ளன. ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் உதயநிதிக்கு நெருக்கமான நபர்களுக்கு முக்கியத்துவம் தரப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.