சென்னையில் கட்டுக்கடங்காத கொரோனா பரவல்... கட்டுப்பாடுகளை கடுமையாக்கக் கோரும் நிபுணர்கள்
சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் வீரியம் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் , பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் சென்னையை பொறுத்தவரை மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
காய்ச்சல், தொண்டை வலி.. தனிமையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.. நாளை கொரோனா டெஸ்ட்
சென்னையில் வீரியம்
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கொரோனா பரவலின் தாக்கம் வீரியமாக உள்ளது. நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு குறையாமல் கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக பார்க்கப்படுவது நெருக்கடியான இடத்தில் மக்கள் அடர்த்தியாக வாழ்வது தான். சென்னையை பொறுத்தவரை காற்றை விட வேகமாக கொரோனா பரவுவதால் மக்கள் அச்சத்துடனும், பதற்றத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.
தீவிர முயற்சி
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதோடு, தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் குழுவையும் களமிறக்கியுள்ளது. மேலும், மண்டலம் வாரியாக கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க 5 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மெத்தனம்
கொரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்குமாறு அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அதனை பொருட்படுத்தாது சாலைகளில் சுற்றுவோர் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். கொரோனா நம்மை ஒன்றும் செய்துவிடாது என்ற அதீத நம்பிக்கையும், மெத்தனமுமே இதற்கு காரணம். தொடக்கத்தில் நோயாளியின் பயண வரலாறு மூலம் தொற்றுக்கான காரணம் கண்டறியப்பட்டது. ஆனால், இன்றுள்ள சூழலில் யார் மூலம் பரவுகிறது என்பதை கண்டறிய முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் நோய் பரவல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சுகின்றனர் மருத்துவ நிபுணர்கள். மற்ற மாவட்டங்களில் உள்ள தளர்வுகள் போல் சென்னைக்கு தளர்வு அளிக்கப்படக் கூடாது என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், பொதுவிடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.