சென்னை ஹைகோர்ட்டுக்கு 2 நீதிபதிகள் நியமனம்- மேலும் 2 சிறுபான்மையினரை நியமிக்கும் பரிந்துரை பெண்டிங்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மேலும் 2 நீதிபதிகளாக சுந்தர் மோகன் கபாலி குமரேஷ் பாபு ஆகியோரை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அப்துல் ஹமீத், ஜான் சத்தியன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகளை கொண்ட கொலிஜியம் சென்னை உயர்நீதிமன்றத்துக்கான 6 நீதிபதிகள் பெயரை கடந்த பிப்ரவரி 16-ந் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பட்டியலில் என். மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு, சவுந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீத், ஜான் சத்தியன் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது.
இதில் மார்ச் மாதம் என்.மாலா, சவுந்தர் ஆகியோரை மட்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு ஆகியோரையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அப்துல் ஹமீத், ஜான் சத்தியன் ஆகியோரது பெயர்களை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக விசாரித்த போது, அப்துல் ஹமீத், சத்தியன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிப்பது தொடர்பான முடிவை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு. இந்த இருவரை நீதிபதிகளாக நியமிக்கலாம் என மாநில அரசு, சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைத்தும் மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸின் அந்த செய்தி.
இவர்களில் அப்துல் ஹமீத், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியான மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தின் ஜூனியராக பணியாற்றியவர். ஏஏவி பார்ட்னர்ஸ் சட்ட குழுமத்தின் தலைவராக உள்ளார். நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட ஜான் சத்யன், சீனியர் கிரிமினல் வழக்கறிஞர். விலங்கியலில் முதுகலை பட்டம் பெற்றவர்; 1997-ல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் இமாலியாஸ், நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதில் சர்ச்சை எழுந்ததையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு சுட்டிக் காட்டியுள்ளது.