தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதிகனமழை - ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வரப்போகும் நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் பல ஊர்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பள்ளிப்பாளையத்தில் சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்துள்ளது. புதுக்கோட்டையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கரூரில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெற்பயிர்கள் நனைந்துள்ளதால் விவசாயிகள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல்,தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 3ஆம் தேதியன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 4ஆம் தேதியன்று தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தருமபுரி, கோவை, ஈரோடு,தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 5ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், வட உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக 19 செமீ மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை, மதுரையில் தலா 12 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி, நத்தம் 11 செமீ மழை, பவானி, பெரம்பலூர் பகுதிகளில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்செங்கோடு 9 செமீ மழை, கரூரில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. வேடசந்தூர், ராசிபுரம், அரவக்குறிச்சியில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் தெற்கு தெற்கு வங்கக் கடல் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரைக்கும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications