கோவை கார் வெடிப்பு சம்பவம் தீவிரவாத செயலா? "இரும்புக்கரம் கொண்டு அடக்கணும்!" வெகுண்டெழுந்த கேப்டன்!
சென்னை : கோவை கார் வெடிப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, இது தீவிரவாத செயலா என்பதை கண்டறிந்து, தமிழகத்தில் தீவிரவாத கலாசாரம் தலை தூக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்த விவகாரம் குறித்து என்.ஐ.ஏ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம், பயங்கரவாத சதித் திட்டமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கோவை சம்பவம் தொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், தமிழ்நாட்டில் தீவிரவாத கலாச்சாரம் தலை தூக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கோவை சம்பவம்
கோவை உக்கடம் அருகே கோட்டைமேட்டில் கடந்த 23-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் பலியானார். அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், வெடிபொருட்கள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் கண்டறியப்பட்டன. அங்கிருந்து 5 பேர் சிலிண்டரை எடுத்துச் சென்றதும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தில் (ஊபா) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் விளக்கம் அளிக்கவில்லை
இந்நிலையில், கோவை கார் வெடிப்புச் சம்பவம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. இருப்பினும் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

தீவிரவாதிகளின் கூடாரம்?
ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிபறி, போதை கலாச்சாரம், பாலியல் வன்கொடுமை என தமிழகம் சீரழிந்து வரும் நிலையில் தற்போது சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தால் தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறதா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது.

இரும்புக்கரம் கொண்டு
தமிழக காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முழு கவனம் செலுத்த வேண்டும். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி இது தீவிரவாத செயலா என்பதை கண்டறிந்து தமிழ்நாட்டில் தீவிரவாத கலாச்சாரம் தலை தூக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, மக்களுக்கு, பாதுகாப்பான அச்சுறுத்தல் இல்லாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications