தமிழகத்தில் வன்முறை, மிருகத்தனம் வழக்கமாகி விட்டது.. ஆம்ஸ்ட்ராங் படுகொலை பெரும் அதிர்ச்சி.. அண்ணாமலை
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இன்று சென்னையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை, ஆனால் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் சென்னை பெரம்பூர் அருகே செம்பியன் பகுதியில் வசித்து வருகிறார். இன்று இரவு 7 மணியளவில் வீட்டின் முன் நின்று சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிலர் ஆம்ஸ்ட்ராங்கிடம் பேச்சு கொடுப்பது போல் வந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கை, கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இந்த கொடூர தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.
இதையடுத்து இதையடுத்து ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை கிரீம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலினின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொலை குற்றவாளிகளை பிடிக்க போலீசார் 5 தனிப்படை அமைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்றும், கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் வன்முறை வழக்கமாகி விட்டது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை கூறியதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்கள், இன்று சென்னையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் அனைவருடனும் @BJP4Tamilnadu ஆறுதலாகத் துணை நிற்கிறோம்.
நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை, ஆனால் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்துள்ளனர். போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும் பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications