கோவை திமுக பிரமுகருக்கு பப்புவா நியூ கினியா தந்த பரிசு! புருவம் உயர்த்தும் கட்சியினர்! பின்னணி என்ன?
சென்னை: பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவுக்கான வர்த்தக ஆணையராக கோவையை சேர்ந்த திமுக பிரமுகரும், தொழிலதிபருமான விஷ்ணுபிரபுவை நியமித்திருக்கிறது அந்நாட்டு அரசு.
சென்னை உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்த நியமன விழாவில், இந்தியாவுக்கான பாப்புவா நியூ கினியா நாட்டின் தூதர் பவுலிஸ் கோர்னியா மற்றும் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே விஷ்ணுபிரபுவுக்கு பப்புவா நியூ கினியா நாடு கொடுத்துள்ள இந்த அங்கீகாரம் கோவை மாவட்ட உடன்பிறப்புகள் பலரையும் வியப்படைய வைத்திருக்கிறது.
முன்பதிவு வேண்டாம்.. நாளை மறுநாள் முதல்.. பூஸ்டர் தடுப்பூசி யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம் தெரியுமா?
பப்புவா நியூ கினியா
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 16 தீவு நாடுகளில் மிகப்பெரும் நாடாக திகழ்கிறது பப்புவா நியூ கினியா. ஆஸ்திரேலியா -நியூஸிலாந்து இடையே அமைந்துள்ள இந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். பழங்குடியின மக்கள் அதிகம் வாழக் கூடிய பப்புவா நியூ கினியாவில் தங்கம் உள்ளிட்ட ஏராளமான இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. தமிழகத்தை சேர்ந்த பலரும் பப்புவா நியூ கினியா நாட்டில் பேராசிரியர்களாவும், தொழில் புரிபவர்களாகவும் இருக்கிறார்கள்.
கோவை தொழிலதிபர்
இந்நிலையில் பப்புவா நியூ கினியா நாட்டின் சார்பில் இந்தியாவுக்கான வர்த்தக ஆணையராக கோவையை சேர்ந்த தொழிலதிபதிரும், திமுக பிரமுகருமான விஷ்ணுபிரபு நியமிக்கப்பட்டிருக்கிறார். தனக்கிருக்கும் மேலிடத் தொடர்புகள் மூலம் அவர் இந்த அங்கீகாரத்தை அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் மஸ்தான், தமிழகம் பொருளாதார ரீதியாக வளர்வதற்கு வெளிநாடுவாழ் தமிழர்களின் பங்கு அவசியம் எனத் தெரிவித்தார்.
அமைச்சர் மஸ்தான்
மேலும், வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றும் இங்கு தொழில் தொடங்க வரும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான இடங்கள் வழங்கப்படும் எனவும் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா இடையே வர்த்தக உறவு உருவாவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
அமைச்சர் பி.டி.ஆர்.
மேலும் பப்புவா நியூ கினியா நாட்டுடன் வர்த்தக உறவு மேம்பட தமிழக நிதி அமைச்சர் என்கிற முறையில் தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்ற உறுதியையும் பழனிவேல் தியாகராஜன் அளித்தார். ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த சுசீந்தரன் முத்துவேல் என்பவர் பசிபிக் பெருங்கல் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரைத் தொடர்ந்து இன்னொரு தமிழர் அந்நாட்டுக்கான இந்திய வர்த்தக ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.