மோர்பி பாலம் இடிந்து விபத்து.. அட இதுக்குமா? திமுக மீது பழி போடும் காயத்ரி ரகுராம்.. பரபர கேள்வி
சென்னை: குஜராத்தின் மோர்பி பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 141ஆக அதிகரித்துள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து பாஜகவின் ரகுராம் காயத்ரி டிவிட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது வரை உயிரிழந்தோரின் சடலங்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் டிசம்பரில் குஜராத் மாநில சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விபத்து ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

விபத்து
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மிக பழமையான கேபிள் பாலம் ஒன்று உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கேபிள் பாலத்தை அம்மாநில அரசு சமீபத்தில் புனரமைத்து கடந்த 26ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று புதியதாக திறக்கப்பட்ட பாலத்தை சுற்றி பார்க்க மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். சுமார் 500க்கும் அதிகமானோர் வந்திருந்த நிலையில் பாலம் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதில் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் மக்களை மீட்பதற்குள் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கின.

நிகழ்ச்சி ரத்து
சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் 97 பேர் உயிரற்ற வெறும் உடல்களாக மீட்கப்பட்டனர். இரவு தொடங்கிய மீட்புப்பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடி இன்று தான் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். இன்று மோடி, 'பேஜ் கமிட்டி சினே மிலன்' நிகழ்ச்சியில் 'ஆன்லைன்' வாயிலாக பங்கேற்க இருந்தார். இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது.

விசாரணை
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாலம் நூற்றாண்டு பழமையானது என்பதால் அம்மாநில அரசு கடந்த ஆறு மாத காலமாக இதனை புனரமைத்து வந்தது. இதனையடுத்து கடந்த 26ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு பாலம் திறந்துவிடப்பட்டது. ஆறு மாதமாக புனரமைக்கப்பட்ட பாலம் நான்கே நாட்களில் எப்படி விபத்தில் சிக்கியது என்று பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

அனுமதி
140 ஆண்டுகள் பழமையான இந்த தொங்கு பாலத்தை புனரமைத்து மீண்டும் மறு பயன்பாட்டுக்கு திறப்பதற்கு முன்னர் எந்த தனிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பாலம் திறக்கப்படுவதற்கு முன்னர் நகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறப்படவில்லை எனவும் 'தி இந்து' ஆங்கில செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இது இவ்வாறு இருக்கையில், குஜராத் சட்டப் பேரவை தேர்தலை கருத்தில் கொண்டுதான் பாலம் விரைவாக திறக்கப்பட்டுள்ளது என்று சிலர் விமர்சித்து வருகின்றனர்.

வீடியோ
இந்நிலையில் பாலம் இடிந்து விழுவதற்கு முன்னர் அப்பாலத்தில் சிலர் அட்டகாசம் செய்வது போன்ற வீடியோ ஒன்று வேகமாக பரவியது. இந்த வீடியோவை பகிர்ந்து "உபிஸ் எப்பொழுது குஜராத் சென்றார்?" என பாஜக மாநில தலைவர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், "100க்கும் மேற்பட்டோர் இறந்தது வருத்தம் அளிக்கிறது. ஆனால் அவர்களின் உயிரிழப்புக்கு யார் காரணம்? பாலத்தை சேதப்படுத்த முயன்ற பொதுமக்களா? அல்லது பாலம் மோசமாக கட்டப்பட்டதா? ஆனால் முடிவில் பல உயிர்கள் இறந்தன. இதை யாராலும் ஈடுசெய்ய முடியாது." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications