எம்ஜிஆரை மிரட்டிய ஆர்.எஸ்.எஸ் ‘வேண்டவே வேண்டாம்.. இது நமக்கு ஒத்துவராது’- இந்த ஃப்ளாஷ்பேக் தெரியுமா?
சென்னை : ஆர்.எஸ்.எஸ் தொடர்பான விவாதங்கள் மீண்டும் தமிழ்நாட்டில் வெகுவாக எழுந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆர்.எஸ்.எஸ் பற்றிய கருத்து பகிரப்பட்டு வருகிறது.
அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் 51 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் எனக் காரணம் கூறி அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு வரும் நவம்பர் 6-ஆம் தேதி ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்காமல் இருந்து வந்த தமிழக அரசை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேநேரம், பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவினர் மௌனம் காத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றி அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் பேசியது பற்றி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் இல்லாவிட்டால் இந்தியாவே செத்திருக்கும்.. அதை தடை செய்யச் சொல்வதா? - எச்.ராஜா ஆவேசம்!
ஆர்.எஸ்.எஸ் பஞ்சாயத்து
தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் எனக் கூறி காவல்துறை அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், நவம்பர் 6ஆம் தேதி பேரணி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் - அதிமுக
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணி தொடர்பாக சமீப நாட்களாக எழுந்து வரும் சர்ச்சைகள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கூடாது என விசிக, இடதுசாரி கட்சிகள், நாம் தமிழர் கட்சி போன்றவை போர்க்கொடி தூக்கின. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி யாதொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், சில அதிமுக சீனியர்கள், அதிமுக ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டதில்லை எனத் தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் பற்றி எம்.ஜிஆர் - ஃப்ளாஷ்பேக்
இந்நிலையில், அதிமுகவை தொடங்கிய மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றிப் பேசியது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜிஆர், சட்டமன்றத்திலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரான கருத்துகளைப் பேசி இருக்கிறார். அவரது பேச்சுகள் தற்போதைய சூழலில் தீயாகப் பரவி வருகின்றன.
எம்,ஜி.ஆர் சட்டமன்ற பேச்சு
1982ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டசபையில் பேசிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், "இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? என சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது.
ஆர்.எஸ்.எஸ் தேவையில்லை
அச்சுறுத்தல் பயிற்சிகளை அரசு ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக சொல்கிறேன், ஆர்.எஸ்.எஸ் தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கனவே என்.சி.சி சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. இந்த பயிற்சிகளே போதும். ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகள் தேவையில்லை." என அப்போது எம்.ஜி.ஆர் சட்டசபையில் பேசியிருக்கிறார். இதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடுமையாக எதிர்வினையாற்றினார்.
எம்.ஜி.ஆரை மிரட்டிய ஆர்.எஸ்.எஸ்
இதையடுத்து, டெல்லி சென்ற எம்.ஜி.ஆரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சூழ்ந்து முரட்டுத்தனமாக நடந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி 17-2-1983ல் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் எம்.ஜி.ஆர். அப்போது ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தடை செய்யப்படுமா? எனக் கேட்கப்பட்டதற்கு எம்.ஜி.ஆர்.கூறிய பதில் வருமாறு:
முரட்டுத்தனமாக
"டெல்லியில் நான் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய அமைச்சர்களைப் பார்க்கப் புறப்பட்ட நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் "இந்து மஞ்ச்" என்ற பெயரில் 45 வயதுக்காரர்கள் என் முன்னால் நின்று கொண்டு, தமிழ்நாட்டில் 5 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள். எம்.ஜி.ஆர் ஒழிக என்று கோஷம் போட்டார்கள். அவர்கள் நடந்து கொண்ட முரட்டுத்தனமான செயலைப் பார்க்கும்போது இதுதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது.
ஆர்.எஸ்.எஸ் நமக்கு ஒத்துவராது
இதுதான் ஆர்.எஸ்.எஸ் என்றால் அது இந்த நாட்டுக்கும், தமிழ்நாட்டுப் பண்புக்கும் ஒத்துவராது. என்னைத் தடுக்கும் அளவிற்கு மட்டமாக நடந்துகொண்டார்கள். இந்து மதத்தை இப்படியெல்லாம் காப்பாற்றிவிட முடியாது. தமிழ்நாட்டில் இவ்வளவு கீழ்த்தரமான அனுபவம் எனக்கு இதுவரை நடந்ததில்லை. இதைப் பார்த்த பிறகு அந்த அமைப்பின் மீது எனக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது" எனப் பதிலளித்தார் எம்.ஜி.ஆர்.