தொடரும் விமர்சனங்கள்.....கேட்ட 40 தொகுதி கிடைக்காதவரை குடைச்சல்தான்... அதிமுகவை மிரட்டுகிறதா பாஜக?
சென்னை: ஆளும் அதிமுக அரசு மீது கூட்டணி கட்சியான பாஜக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. அதிமுகவுடனான தொகுதி பேரங்களுக்காகவே இந்த விமர்சனங்களை பாஜக முன்வைப்பதாகவே கூறப்படுகிறது.
அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்று சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் அறிவித்தனர். அதிமுகதான் இந்த அறிவிப்பை வெளியிட்டதே தவிர பாஜக கூட்டணி பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தமிழக பாஜக தலைவர்கள் பொதுவாக அதிமுக அரசை விமர்சித்து வருகின்றனர். மேலும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை கட்சியான பாஜகதான் அறிவிக்கும் என்றும் அக்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
பாஜகவுக்கு முதல்வர் பதில்
தங்களது கட்சி, அரசு மீதான விமர்சனங்களுக்கு அதிமுக அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் பதில் தந்தும் வருகின்றனர். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொள்கை வேறு... கூட்டணி வேறு.. நாங்கள் கொள்கைப்படியே நடப்போம் என கூறியிருந்தது கூட பாஜகவுக்கான பதிலாகவே பார்க்கப்பட்டது.
பொங்கல் பரிசு விமர்சனம்
இதனிடையே அதிமுக அரசு அரிவித்த பொங்கல் பரிசு ரூ2,500 தொடர்பாகவும் பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். அதிமுக அரசை ஊழல் அரசு எனவும் கடுமையாகவும் சாடி வருகின்றனர். இதனால் அதிமுக கூட்டணியில்தான் பாஜக நீடிக்கிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக கேட்கும் 40 சீட்
இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் அரசியல் பார்வையாளர்கள், அதிமுகவிடம் 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என பாஜக பிடிவாதம் பிடிக்கிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கணிசமான தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கிறது. இந்த 2 கோரிக்கைகளையும் அதிமுக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.
பாஜகவுக்கு ஒன்லி 20 சீட்
பாஜகவுக்கு அதிகபட்சமாக 20 தொகுதிகள் ஒதுக்க முடியும். அதுவும் தமிழகத்தில் தாங்கள் ஒதுக்கும் தொகுதிகளை பாஜக பெற்றுக் கொள்ள வேண்டும் என அதிமுக தரப்பு கறாராக சொல்லி வருகிறது. இதனை பாஜக ஏற்க மறுத்துவிட்டது. இந்த கோபத்தில்தான் அதிமுக அரசை காட்டமாகவே பாஜக தலைவர்கள் விமர்சித்தும் வருகின்றனர் என்கின்றனர்.
வருமான வரி சோதனை
மேலும் அண்மையில் தமிழகத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகள் கூட அதிமுகவுக்கு நெருக்கடி தரக் கூடியதாகத்தான் இருக்கிறது. அதிமுகவுக்கு தேர்தல் களத்தில் பக்க பலமாக இருக்கக் கூடியவர்களையே இலக்கு வைத்து இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. பாஜகவின் இந்த அதிரடி நடவடிக்கை அதிமுக தரப்பை கொஞ்சம் அதிர்ச்சி அடையவும் வைத்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது.