வீட்டுக்கு பக்கத்தில் இருந்த புறா! மீனாவின் கணவருக்கு உண்மையில் நடந்தது என்ன? வெளியான பின்னணி!
சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணத்திற்கு என்ன காரணம் என்ற விவரம் வெளியாகி உள்ளது. மருத்துவ வல்லுனர்கள் பலர் இது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
நடிகை மீனாவின் கணவர் நேற்று இரவு மரணம் அடைந்தார். இரண்டு நுரையீரலும் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இவரின் இரண்டு நுரையீரலும் சமீபத்தில் செயல் இழக்கும் நிலைக்கு சென்றது. மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர்.
மாற்று நுரையீரல்
இதனால் மாற்று நுரையீரல் சிகிச்சைக்கு காத்திருந்தவருக்கு டோனர் கிடைக்கும் முன் மரணம் ஏற்பட்டுள்ளது. புறாக்களின் எச்சம் மூலம் பரவும் ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்ற நோய் காரணமாக இவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நுரையீரல் பாதிப்பிற்கு இடையே இவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டதால் இவர் மரணம் அடைந்தார். வித்யாசாகருக்கும் மீனாவுக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.
என்ன காரணம்
மீனாவின் கணவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட காரணம் புறங்களின் எச்சம் என்று மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. புறாக்கள் எச்சத்தால் மரணம் ஏற்படுமா என்று கேட்டால்.. ஆம் ஏற்படும். இந்த நோயை ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்று கூறுவார்கள். புறா, வவ்வால், ஆந்தை, எலி தொடங்கி பல்வேறு பறவைகள், பூச்சிகள், சிறு விலங்குகளின் எச்சத்தால் ஏற்பட கூடிய நோயாகும் இது. உங்கள் வீட்டிற்கு அருகே பக்கத்து வீட்டில், உங்கள் வீட்டு ஜன்னலில் புறா உள்ளிட்ட பறவைகளின் எச்சங்கள் இருந்தால் இந்த பாதிப்பு வரலாம். மீனாவின் கணவர் இருந்த பெங்களூர் வீடு அருகிலும் புறாக்கள் நிறைய வளர்க்கப்பட்டுள்ளன.
எப்படி ஏற்படும்
இதை சுத்தம் செய்யும் பணியில் வேலை பார்க்கும் நபர்களுக்கு இந்த பாதிப்பு வரலாம். விவசாயிகள் பலர் பறவைகளின் எச்சங்களை தங்கள் வயலில் சுத்தம் செய்வார்கள். அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு குறைவாக இருந்தால் இந்த பாதிப்பு வரலாம். அமெரிக்காவில் பறவைகள் எச்சம் அதிகம் காணப்படும் மிஸ்ஸிஸிப்பி, ஒஹையோ பகுதிகளில் இந்த ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் அதிகம் காணப்படுகிறது. உடல் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் ஏற்படுவது வழக்கம்.
அறிகுறிகள் என்ன?
இதற்கு சிகிச்சை முறை இருந்தாலும் உங்கள் நுரையீரல் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படும். பறவைகளில் எச்சங்களில் இருக்கும் Histoplasma capsulatum என்ற பங்கஸ் காற்றில் பறந்து நமது நுரையீரலுக்கு செல்லும். இதன் மூலம் நுரையீரல் பாதிக்கப்பட்டு,சேதம் அடையும். இதன் காரணமாக நுரையீரல் நாள்பட்ட பாதிப்பை அடைந்து செயல் இழக்கும் நிலை ஏற்படும். ஆனால் வைரஸ் போல ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது பரவாது.
பின்னணி
விவசாயிகள், பூச்சி கட்டுப்பாட்டு தொழிலாளர்கள் கோழி வளர்ப்பவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தோட்டக்காரர்கள், குகை ஆய்வாளர்கள் ஆகியோருக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் இதில் ஏதாவது பணிகளை செய்து, பின் வரும் அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை காண வேண்டும். காய்ச்சல். குளிர், தலைவலி, தசை வலிகள், வறட்டு இருமல், நெஞ்சு வலி ஆகியவை இருந்தால் மருத்துவரை காண வேண்டும்.