இடியாப்ப சிக்கல்..திமுக வசமாக வைத்த 2 கண்டிஷன்! பறந்தடித்து டெல்லிக்கு போன ஆளுநர் ரவி! நடந்தது என்ன?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக கோட்டை வட்டாரத்திலும், ஆளுநர் மாளிகை வட்டாரத்திலும் விசாரித்ததில் பல தகவல்கள் வெளியாகின.
ஆளுநர் ரவி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். காலை 10 மணிக்கு டெல்லி புறப்பட்ட அவர் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயணத்தில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க இருக்கிறாராம்.
இந்த நிலையில்தான் ஆளுநரின் இந்த திடீர் டெல்லி பயணத்திற்கு பின் என்ன காரணம் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
2 நாள் தானே இருக்கு.. இடிக்குதே! டெல்லிக்கு இன்று அவசரமாக புறப்படும் ஆளுநர் ரவி.. ஒரே குழப்பம்!
12 மசோதா பெண்டிங்
அதன்படி ஆளுநர் ரவி டெல்லி செல்ல முதல் காரணம், அவரிடம் நிலுவையில் இருக்கும் 12 மசோதாக்கள் குறித்து ஆலோசனை செய்ய அவர் டெல்லி சென்று இருக்கிறாராம். ஆளுநர் ரவி நீட் விலக்கு மசோதாவை ஏற்கனவே டெல்லி அனுப்பிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார். இது போக கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிக்காலத்தை குறைக்கும் மசோதா, முதல்வரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கும் மசோதா, பாரதியார் பல்கலை. திருத்த மசோதா, சில சட்டங்களை திரும்ப பெறுவது தொடர்பான மசோதா, அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் செய்வதற்கான மசோதா ஆகியவை நிலுவையில் உள்ளன.
பொதுப்பட்டியல் ஆலோசனை
மேலும் கால்நடை, மீன் வள பல்கலை.க்கு துணை வேந்தரை தமிழக அரசே நியமிப்பது தொடர்பான மசோதா என்று பல மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதில் முக்கியமாக பொதுத் தமிழை ஒரு பாடமாக டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுகளில் சேர்ப்பது போன்ற முக்கியமான சில மசோதாக்களும் உள்ளன. இதில் உயர்கல்வி தொடர்பான மசோதாக்கள் பொதுப்பட்டியல் கீழே வரும். இதனால் பொது பட்டியல் தொடர்பான மசோதாக்களில் என்ன முடிவு எடுக்கலாம் என்று ஆளுநர் ரவியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளாராம்.
குடியரசுத் தலைவர் தேர்தல்
இது ஒரு பக்கம் இருக்க பாஜக தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதில் எப்படியாவது எதிர்க்கட்சிகள் ஏற்க கூடிய பொது வேட்பாளரை நிறுத்தி குடியரசுத் தலைவராக வெற்றிபெற வைத்து விட வேண்டும் என்று திட்டத்தில் பாஜக இருக்கிறது. இந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சியை சேர்ந்த சில மாநில கட்சிகளும் ஏற்கும் வகையில் பொது வேட்பாளரை களமிறக்க பாஜக முயன்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் வருகின்றன.
கூட்டாக பாஜக கருத்து
பாஜக சார்பாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் பிரதமர் மோடி இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அவர் மனதில் வேறு ஒரு வேட்பாளர் இருக்கிறாராம். இருந்தாலும் தெற்கில் இருந்து சப்போர்ட் வேண்டும். தெற்கில் உள்ள தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக போன்ற மாநில ஆளும் கட்சிகள் சப்போர்ட் வேண்டும் என்பதால் வெங்கையா நாயுடுவை களமிறங்க பாஜக மேலிடம் நினைக்கிறதாம்.
சந்தித்தார்
இதையடுத்தே தெற்கில் சென்று சப்போர்ட் இருக்கிறதா என்று பாருங்கள் என்று வெங்கையா நாயுடுவுக்கு மேலிடம் ஆலோசனை வழங்கியதாம். இதை கருத்தில் கொண்டே வெங்கையா நாயுடு அமைச்சர் துரைமுருகனை சந்தித்தார். பின்னர் நேரம் வாங்கி., முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பாக நான் நின்றால் ஆதரிக்க தயாரா என்று வெங்கையா நாயுடு சார்பில் முதல்வரிடம் கேட்கப்பட்டு இருக்கிறதாம்.
திமுக 2 கண்டிஷன்
அது கட்சி சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. நான் வாக்கு கொடுக்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் கொஞ்சம் பட்டும்படாமல் பேசி இருக்கிறாராம். அதே சமயம் ஆதரவு தந்தால் எங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? எங்களுக்கு என்ன லாபம் என்று கேட்டு இருக்கிறாராம். இந்த நிலையில்தான் பாஜகவை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்க மறைமுகமாக 2 முக்கிய கண்டிஷன்களை திமுக தரப்பு போட்டு உள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 கண்டிஷன் என்னென்ன?
அதன்படி நாங்கள் அனுப்பிய மசோதாக்கள் அனைத்தையும் டெல்லிக்கு அனுப்ப வேண்டும். அதை குடியரசுத் தலைவர் உடனே ஏற்க வேண்டும். இனி வரும் சட்டங்களுக்கும் இதே நிலையை பின்பற்ற வேண்டும். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிட கூடாது. இல்லையென்றால் ஆளுநர் ரவியை திரும்ப பெற்று வேறு ஆளுநரை நியமிக்க வேண்டும் .. அல்லது ஆளுநர் ரவி எங்களுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்று 2 கண்டிஷன்களை திமுக தரப்பு போட்டுள்ளதாம். கிட்டத்தட்ட பாஜக இதில் இடியாப்ப சிக்கல் போல மாட்டி உள்ளது.
ஆளுநர் எடுக்க வேண்டிய முடிவு
இதில் ஆளுனர் சம்பந்தப்பட்டு இருப்பதால்தான் அவர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. திமுக அரசு இயற்றிய மசோதாக்கள் என்னென்ன, அதை உடனே அனுமதிக்க முடியுமா என்று கேட்க அவருக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்திருக்கலாம் என்கிறார்கள். இதையே காரணமாக வைத்து திமுக ஆதரவை குடியரசுத் தலைவர் தேர்தலில் பெறலாம் என்று பாஜக நினைக்கிறதாம். இதனால் மசோதாக்களை என்ன செய்யலாம்.. அரசுடன் இணக்கமாக செல்லலாமா என்பது தொடர்பாக ஆளுநர் ரவிக்கு அமித்ஷா தரப்பில் அட்வைஸ் தர வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.