சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிரடி முடிவை எடுத்தது ஏன்..?- 2021 தேர்தல் முதல் திமுக உட்கட்சி தேர்தல் வரை!
சென்னை : திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஆகஸ்ட் 29ஆம் தேதியே திமுக தலைவர் ஸ்டாலினிடம் அளித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக பரபரவென தகவல் பரவி வந்தது.
சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக சமீப சில நாட்களாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் தான் தனது விலகலை வெளிப்படையாக அறிவித்துள்ளார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
மிகுந்த மன நிறைவோடு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருக்கிறார் சுப்புலட்சுமி ஜெகதீசன். எனினும் சில தொடர் நிகழ்வுகள் காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் இந்த முடிவை எடுத்ததாகக் கூறுகின்றனர் ஈரோடு மாவட்ட திமுகவினர்.

சுப்புலட்சுமி ஜெகதீசன்
தி.மு.க துணை பொதுச்செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன், மத்திய அமைச்சராக இருந்தவர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுகவில் நீண்ட காலமாக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும், அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

206 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
2021 சட்டமன்ற தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.கவை சேர்ந்த சரஸ்வதி போட்டியிட்டார். இதில் 206 வாக்குகள் வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வி அடைந்தார். இது அவருக்கும், திமுக தலைமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுகவின் சீனியர் தலைவரான சுப்புலட்சுமி வென்றால் சபாநாயகர் அல்லது அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

புகார்
சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது தோல்விக்குக் காரணம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி மற்றும் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 2 ஒன்றிய செயலாளர்கள் தான் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சி தலைமையிடம் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் தலைமை மேற்கொள்ளவில்லை என்பது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

பதவி
சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் அளித்த நிர்வாகிக்கு பதவி வழங்கப்பட்ட நிலையில் இவருக்கு கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என சிலபல மாதங்களாகவே அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் புகார் அளித்த 2 ஒன்றிய செயலாளர்களுக்கு சமீபத்தில் நடந்த உட்கட்சித் தேர்தலில் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. சுப்புலட்சுமி ஜெகதீசனின் ஆதரவாளர்களுக்கு பதவிகள் கிடைக்கவில்லை.

ஓய்வு முடிவு
இதனால் அதிருப்தி அடைந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், இத்தனை ஆண்டுகாலம் திமுகவில் முக்கிய பொறுப்புகளில் வகித்தாயிற்று, இனி அரசியலில் சரிவைச் சந்திக்க வேண்டாம், ஓய்வு பெறலாம் என திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் சிறகடித்தன. இதையடுத்துத்தான் திமுக தலைவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். ஆனால், அவரிடம் தலைமையில் இருந்து பேசி வந்துள்ளனர். எனினும், தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார் சுப்புலெட்சுமி ஜெகதீசன்.

அரசியலில் இருந்தே
சமீபத்தில் விருதுநகரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்காதது இந்த விவகாரத்தை பெரிதாக்கியது. இந்நிலையில் தான் தனது விலகலை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் சுப்புலட்சுமி ஜெகதீசன். திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராகி சிறப்பாகப் பணியாற்றும் மனநிறைவோடு அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.












Click it and Unblock the Notifications