31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால்.. நடவடிக்கை என்ன? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
சென்னை: ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 31 ஆம் தேதி வரை இருக்கிறது. ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டிய மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை மொத்தம் 2 கோடியே 67 லட்சம் பேர் உள்ளனர். இதில் 50 விழுக்காட்டிற்கு மேலாக தற்போது வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து இருக்கிறார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.
மின் அட்டையுடன் ஆதார் இணைப்பிற்கு எதிரான வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு.. தடையா?
டிசம்பர் 31 ஆம் தேதி வரை
மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக கடந்த மாதம் முதல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் இதில் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. பண்டிகை நாட்கள் தவிர ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் உள்ள 2.65 கோடி மின் நுகர்வோர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதற்கிடையே மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க தடையில்லை என்று கூறிவிட்டது.
செந்தில் பாலாஜி பேட்டி
வரும் 31 ஆம் தேதிக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்கான மின்நுகர்வோர்கள் முழு வீச்சில் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இது தொடர்பாக பேசினார். அப்போது அவரிடம் வரும் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்து ஆகிவிடும் என்று வாட்ஸ் அப் போன்றவற்றில் செய்திகள் பரவுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி கூறியதாவது:
நல்ல முயற்சி
சிலருக்கு அவதூறு பரப்ப வேண்டும். அவதூறு பரப்புவதற்கு எந்த வித கருத்துக்களும் கிடைப்பது இல்லை. நீதிமன்றமே ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடைமுறைகளை செயல்படுத்துவகற்கான ஆணைகளை வழங்கியிருக்கிறது. சிலர் நீதிமன்றம் கூட சென்றனர். ஆனால் அவர்கள் நினைத்த தீர்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. எடுத்து இருக்க கூடிய முயற்சி.. நல்ல முயற்சி என்பதற்கான உத்தரவுதான் கிடைத்து இருக்கிறது.
50 விழுக்காட்டிற்கு மேலாக
ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 31 ஆம் தேதி வரை இருக்கிறது. ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டிய மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை மொத்தம் 2 கோடியே 67 லட்சம் பேர் உள்ளனர். இதில் 50 விழுக்காட்டிற்கு மேலாக தற்போது வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து இருக்கிறார்கள்.
ஏற்றுக்கொள்ள தேவையில்லை
வரக்கூடிய 31 ஆம் தேதி வரை எவ்வளவு பேர் முழுமையாக இணைத்து இருக்கிறார்கள் என்ற கணக்கீடுகள் வரப்பெற்ற பிறகு தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச்செல்வோம். அடுத்த கட்ட அறிவிப்புகள் என்பது முதல்வர் உத்தரவை பெற்றுத்தான் வரும். எனவே அதுவரை சில அரசியல் இயக்கங்கள் அரசியல் சூழலுக்காக சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பதிவிடுவதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள தேவையில்லை, நம்பத் தேவையில்லை" என்றார்.