மகா சிவராத்திரி பூஜை நேரம், விரத நடைமுறை என்ன? இரவு 11.30 முதல் 1 மணி வழிபாடு முக்கியம்! முழு தகவல்
சென்னை: மகாசிவராத்திரியான இன்று பக்தர்கள் விரதம், பூஜை மேற்கொள்வது எப்படி?, இந்த தினத்தில் விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:
மகாசிவராத்திரி...இந்த விரதம் ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச(தேய்ப்பிறை) சதுர்த்தி திதியில் பின்பற்றப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த மிக முக்கிய நாட்களில் ஒன்று. உமையம்மை, சிவபெருமானுக்கு பூஜை செய்த நாள் தான் மகாசிவராத்திரியாகும். இந்த பூஜையால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் மகாநிசி காலத்தில் ஆவிர்பவித்து அருளியதாக புராணங்கள், ஆகமங்கள் கூறுகின்றன.
அதன்படி இன்று மகாசிவராத்தியாகும். அருமையான இந்நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து பூஜை செய்தால் நல்லது நடக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். மகாசிவராத்திரியில் விரதம், பூஜை செய்யும் முறைகள் குறித்து இங்கு விரிவாக பார்ப்போம்.
விரதம் எப்படி
மகாசிவராத்திரி தினத்தில் காலையில் எழுந்து சூரிய உதயத்துக்கு முன்பு குளித்திருக்க வேண்டும். காலை 6 மணிக்கு முன்பு வீட்டு பூஜை அறையில் தீபமேற்றி நெற்றி நிறைய விபூதி பூசி 'ஓம் நமசிவாய' 'சிவாய நம' எனும் மந்திரத்தை உச்சரித்து விரதம் துவக்கியிருக்க வேண்டும். இந்த விரதத்தை நாளை காலை வரை அதாவது சிவபெருமானின் நான்காம் கால பூஜை நிறைவடையும் வரை கடைப்பிடிக்க வேண்டும். இன்று காலை முதல் மறுநாள் காலை 6 மணி வரை எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து விரதம் முடியும்போது சிவபெருமானுக்கு படைக்கும் பிரசாதத்தை சாப்பிட வேண்டும். இதன்மூலம் விரதத்தை முடித்து கொள்ளலாம். இடைப்பட்ட காலத்தில் தண்ணீர் மட்டும் பருகலாம். உடல்நிலையை பொறுத்து விரதத்தை மேற்கொள்வதை கடைப்பிடிப்பது நல்லது. இதில் எந்த தவறும் இல்லையாம்.
தூங்காமல் இருப்பது எப்படி
மகா சிவராத்திரி என்றால் தூங்காமல் கண் விழிக்க வேண்டும் என்பது நாம் அறிந்ததே. இதனால் மகா சிவராத்திரி விரதம் இன்று துவங்கியது முதல் நாளை சிவபெருமானை தரிசனம் செய்த பிறகு தான் தூங்க வேண்டும். இரவு கண் விழிக்கும்போது சிவபெருமானை நினைத்து சிவபுராணம், திருவாசகம், தேவாரம் உள்ளிட்ட புத்தகங்களை படிக்கலாம். இல்லாவிட்டால் திருவாசகம், தேவாரம், சிவபுராணம் தொடர்பான பாடல்களை கேட்கலாம். பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா உள்ளிட்ட விஷயங்களை செல்போன், தொலைக்காட்சி, தியேட்டர்களில் படம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நமது உள்ளம் முழுக்க சிவனே குடியிருக்க வேண்டும். அவனன்றி வேறு எவர்க்கும் இடம்தரலாகாது.
பூஜை முறை
வீட்டில் சிவலிங்கம் வைத்திருப்பவர்கள் சிவராத்திரியில் கட்டாயம் ஒரு கால பூஜை செய்ய வேண்டும். பால் அபிஷேகம், வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது கட்டாயமாகும். சிவராத்திரி நான்கு கால பூஜை நேரம் என்பது இரவு 7.30 மணிக்கு தொடங்கும். அதன்படி இன்று இரவு 7:30 மணிக்கு பிறகு உங்கள் வீட்டு சிவலிங்கத்துக்கு இந்த பூஜை, அபிஷேகம் செய்து முடிந்த நிவேதனத்தை வைத்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பூஜை நேரங்கள்
முதல் கால பூஜை இன்று இரவு 7.30 மணிக்கு துவங்கும். 2ம் கால பூஜை இரவு 10.30, மூன்றாம் கால பூஜை இரவு 12 மணி, நான்காம் கால பூஜை அதிகாலை 4.30 மணிக்கு துவங்கும். இதன்மூலம் முதல் கால பூஜையை இரவு 7.30 மணியிலிருந்து இரவு 10.30 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். இதேபோல்தான் பிற கால பூஜையையும் கணக்கிட்டு செய்யலாம்.
முக்கிய நேரம்
குறிப்பாக இரவு 11.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை சிவபெருமானை வழிபடுவது மிகமிக சிறப்பான காலமாக கூறப்படுகிறது. இதை பக்தர்கள் கடைப்பிடிக்கலாம். ஏனென்றால் இந்த நேரத்தில்தான் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமானை வழிபட கூடிய நேரமாகும். 'லிங்கோத்பவ காலம்' எனும் இந்த நேரத்தை தவற விடக்கூடாது.
விரதம் முடியாதவர்கள்...
வீட்டில் லிங்கம் இல்லாதவர்கள் சிவபெருமான், அண்ணாமலை ஈஸ்வரரின் படத்துக்கு முன்பு அமர்ந்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து சிவபெருமானுக்கான மந்திரங்கள் அல்லது பாடல்கள், இசை வடிவில் மந்திரங்களை கேட்கலாம். இதுதவிர கோவிலுக்கு சென்று சிவபெருமானின் அபிஷேகத்தை வழிபட்டும் இரவில் கண்விழிக்கலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் மகாசிவராத்திரியான இன்று முழுமனதோடு, நெற்றியில் திருநீறு பூசி மனதார ஒரு முறை 'ஓம் நமசிவாய' மந்திரத்தை உச்சரித்தாலே போதும். உங்களுடைய பிறவிப் பலனை நீங்கள் பெறலாம்.