பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப் டாப் எப்போது கிடைக்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழக அரசு வழங்கக் கூடிய இலவச லேப்டாப்களை தயாரிக்க அரசு அழைப்பு விடுத்த போதிலும் கணினி தயாரிப்பு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக அரசின் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் கோர நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததன் காரணமாகவே கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்பட முடியவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச லேப்டாப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டு மற்றும் நடப்பு கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கு கொரோனாதான் காரணம் என பள்ளிக்கல்வித்துறை சுட்டிக்காட்டுகின்றது. மாணவர்களுக்கான இலவச லேப்டாப்களை தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனங்கள் ஒப்பந்தத்தை எடுக்க முன்வராததே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
1 கோடி பேருக்கு இலவச ஸ்மார்ட் போன்,டேப்லெட் தரும் யோகி அரசு - ஆட்சியைத் தக்கவைக்க ஆயத்தம்
கொரோனா
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதையும் கொரொனோ தொற்று ஆட்டிப்படைத் துவருகிறது. வீட்டிலிருந்தே பணி செய்ய வேண்டிய சூழல் மற்றும் ஆன்லைன் வழியில் கல்வி கற்க வேண்டிய நிலை என முன்னெப்போதும் இல்லாத சூழலுக்கு இளைஞர்களும் மாணவர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.
லேப்டாப், கம்யூட்டர் தேவை அதிகம்
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கம்யூட்டர், லேப்டாப்புகள் ஆகியவற்றின் தேவை உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அவற்றின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே கணிப்பொறி , லேப்டாப்புகள் தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனங்களின் லாபமும் அதிகரித்துள்ளது.
ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்
தமிழக அரசு வழங்கக்கூடிய லேப்டாப்புகள் மிக குறைந்த விலையில் தயாரிக்கப்படுபவை. அதே வேளையில் சந்தைகளுக்கு அனுப்பப்படும் லேப்டாப்புகளில் விலை 30 ஆயிரத்திற்கும் அதிகமாகும். தமிழக அரசு வழங்கக் கூடிய இலவச லேப்டாப்களை தயாரிக்க அரசு அழைப்பு விடுத்த போதிலும் கணினி தயாரிப்பு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இலவச லேப் டாப்
தற்போதைய கொரொனோ காலகட்டத்தை பயன்படுத்தி அதிக விலை கொண்ட லேப்டாப்களை தயாரிக்கவே நிறுவனங்கள் விரும்புவதே டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டாததற்கு காரணமாகும். இதன் காரணமாகவே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய லேப்டாப்களை உரிய நேரத்தில் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் விரைவாக மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.