விசில் சின்னத்தை விளாசிய ஜெயக்குமார்.. டைட்டானிக் படத்தோடு கோர்த்து விட்டு கலகல!
சென்னை: விசில் எப்போது அடிப்பார்கள், ஆபத்தில் இருக்கும் போதுதான் அடிப்பார்கள். டைட்டானிக் படத்தை பார்த்தீர்களா? கடைசி கிளைமாக்ஸில்தான் விசில் அடிப்பார்கள் என விஜய்யின் கட்சி சின்னத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
அண்ணா நினைவுநாளையொட்டி சென்னை மெரினாவில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ஜெயக்குமார். அப்போது சென்னை மெரினாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், விஜய் வாங்கும் சம்பளம் கறுப்பா, வெள்ளையா, எவ்வளவு வரி செலுத்துகிறார் என்பதை சொல்ல முடியுமா? அவர் வாங்கும் சம்பளம் கருப்பு அதிகம், வெள்ளையில் குறைவு.

யார் யாரை விமர்சிக்க வேண்டும் என்ற விவஸ்தை இல்லாதவர் விஜய். ஆதவ் அர்ஜுனாவின் லாட்டரி பணத்தில்தான் தவெக கட்சியே நடக்கிறது.
போட்டி திமுக அதிமுக இடையேதான். நடுவில் வந்து திமுகவுக்கு தவெகவுக்கும்தான் போட்டி என விஜய் கூறுவது நானும் ரவுடிதான் என்பதை போல் உள்ளது. அவரை யாரும் கண்டுக் கொள்ள மாட்டார்கள்.
தவெக தொடக்க விழாவில் விஜய் நடனம் ஆடியதால் கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பம் எத்தனை வேதனைப்படும். விசில் எப்போது அடிப்பார்கள். ஆபத்தில் இருக்கும்போதுதான்.
அப்படி தவெகவினர் ஆபத்தில் இருப்பதை உணர்த்தி விசில் அடிக்கிறார்கள். டைட்டானிக் படம் பார்த்தீங்களா, அதில் கிளைமாக்ஸில் விசில் அடிப்பார்கள், எதற்கு அவர்கள் ஆபத்தில் உள்ளதை குறிப்பிடுவார்கள். இவ்வாறு ஜெயக்குமார் விஜய்யையும் அவரது கட்சியையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அவர் மேலும் கூறுகையில், "இப்போ பாஸ்ட்புட் மாதிரி ஒருத்தர் கட்சி ஆரம்பிச்சு இருக்காரு பாருங்க! அவர் கட்சியில் உள்ளவர்களை காப்பாற்றுமாறு விசில் அடிச்சுட்டுதான் இருக்காங்க! ஊழல்வாதின்னு சொல்லி எங்க கட்சியை சொல்றாரு. இவர் பெயரில் வருமான வரி வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் எங்கள் கட்சியை பார்த்து ஊழல் சக்தி என்கிறார்.
விஜய்க்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், அதிமுகவை தொட்டால் , நீ கெட்ட! விஜய் போட்டியிலேயே கிடையாது. அதிமுக, திமுகவுக்கு இடையேதான் போட்டி, திரைப்படங்களில் நடித்த போதும் நிறைய பேருக்கு உதவி செய்தவர் எம்ஜிஆர். போட்டியிட்ட தேர்தல்களில் வெற்றி வாகை சூடியவர் எம்ஜிஆர்.
1953 ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு உதவி செய்தார், விளம்பரம் ஏதும் இல்லாமல் செய்தவர் எம்ஜிஆர். இப்போ தேர்தலை மனசுல வைத்துக் கொண்டு உதவி செய்தால் என்ன அர்த்தம். அதுல உள்நோக்கம் இருக்கு என்றார். விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு அவரை பெரியளவில் அதிமுக விமர்சிக்காமல் இருந்தது.
கரூர் விவகாரத்தின் போதும் விஜய்க்கு ஆதரவாகவே அதிமுகவை சேர்ந்தவர்கள் பேசி வந்தனர். அது போல் விஜய்யும் அதிமுகவை விமர்சனம் செய்யாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெக தலைவர் விஜய், அதிமுக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அது முதல் விஜய்யை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் என தொடர்ந்து விஜய் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. விஜய்யின் கணக்கு வழக்குகள் குறித்தும் பல்வேறு கண்டனங்கள் குவிந்துள்ளன.












Click it and Unblock the Notifications