திமுக ஆட்சி காலத்திலும் கடன்சுமை இருந்தது... அதிமுக ஆட்சியில் நிதி சீர்கேடு என்பது தவறானது - இபிஎஸ்
திமுக ஆட்சிகாலத்திலும் கடன் சுமை இருந்தது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: திமுக ஆட்சிக்காலத்திலும் கடன் சுமை இருந்தது என்று தமிழக சட்டசபை எதிர்கட்சித்தலைவரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்யும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை 20 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் இன்று வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு மே மாதம் வரை அதிமுக ஆட்சியில் இருந்தது.

கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் நிதிநிலை மோசமாக இருந்ததாகவும் கடன் அளவு அதிகரித்துள்ளதாகவும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றம் சாட்டியது. திமுக ஆட்சி அமைத்தால் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைமையிலான ஆட்சி தற்போது அமைந்துள்ளது. திமுக அரசின் நிதித்துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றார்.
கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசின் நிதி நிலை குறித்து ஆகஸ்ட் மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி இன்று வெள்ளை தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கடந்த2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப்பொறுப்பு ஏற்கும் போதே கடன் சுமை இருந்ததாக கூறினார். 2006 -2011ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் கடன் சுமை அதிகமாகவே இருந்ததாகவும் தெரிவித்தார்.
சட்டசபையில் 20ஆண்டுகளுக்குப் பின் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் வெள்ளை அறிக்கை எப்படி இருக்கும்?
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிதி சீர்கேடு நடைபெற்றதாக கூறுவது முற்றிலும் தவறு என்று கூறிய எடப்பாடி பழினிச்சாமி, மின்சார சாதனங்கள் விலை உயர்ந்தாலும் மின்கட்டணங்கள் உயர்த்தப்பட வில்லை என்று கூறினார்.
இதேபோல டீசல் விலை உயர்வு ஏற்பட்டாலும் போக்குவரத்து கட்டணங்கள் விலை உயர்த்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று சொன்னார்கள் அது என்னவானது என்று கேள்வி எழுப்பினார். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னார்கள் அதுவும் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications