சுயமரியாதையை அடகு வைத்தவர் கோமாளியா? ‘உத்தமன்’ அண்ணாமலை கோமாளியா? - சீறும் பாஜக நாராயணன்!
சென்னை : சுயமரியாதையை அடகு வைத்த உன்மத்தன் கோமாளியா? அல்லது ஈஸ்வரன் கோவிலில் உள்ள முருகன் சந்நிதியின் முன்பு கந்த சஷ்டி கவசம் படித்த உத்தமன் கோமாளியா? என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்தததை விட கோமாளித்தனம் வேறு என்ன இருக்க முடியும்? என்று அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்தார்.
அதற்கு எதிர்வினையாக, பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, பதவிக்காக, பணத்திற்காக சுயமரியாதையை அடகு வைத்து தன்னை விமர்சித்தவரையே தலைவராக ஏற்றுக்கொண்டவர் கோமாளியா? அண்ணாமலை கோமாளியா எனப் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை vs செந்தில் பாலாஜி
கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு தொடங்கி அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. அண்ணாமலை, செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், அதற்கு செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுப்பதும் தமிழக அரசியலில் தொடர்கதையாகி விட்டது. சமீபத்தில் இருவருக்கும் இடையேயான மோதல் தனிப்பட்ட தாக்குதலாகவும் உருவெடுத்துள்ளது.

முற்றும் மோதல்
செந்தில் பாலாஜியை சாராய அமைச்சர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு வந்த நிலையில், அண்ணாமலையை அரசியல் கோமாளி என அழைத்து வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கோவையில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இப்படி ஒரு கோமாளியை
அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, அந்த கோமாளியை பற்றி கேள்வி கேட்க வேண்டாம். கோட்டை ஈஸ்வரன் கோயிலில் அமர்ந்து, கந்த சஷ்டி கவசம் படித்த கோமாளி அண்ணாமலை. இந்த கோமாளியை வேறு எங்கும் பார்க்க முடியாது. ஆகையால் அந்த கோமாளி பற்றிய கேள்விகளை தயவு செய்து கேட்காதீர்கள். முதலமைச்சரின் செய்திகளை விட, சில கோமாளிகளின் செய்திகள் தான் ஒருசில பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வருகிறது எனத் தெரிவித்தார்.

யார் கோமாளி? உன்மத்தனா? உத்தமனா?
இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், "ஊழல் பேர்வழி, ஆள்கடத்தல் பேர்வழி, நில அபகரிப்பு மோசடி நபர், கேடு கெட்டவன் என்றெல்லாம் கழுவிக் கழுவி ஊற்றி விமர்சித்த நபரையே வெட்கம், மானம், சூடு, சொரணை என்ற எதுவுமேயில்லாமல் பதவிக்காக, பணத்திற்காக சுயமரியாதையை அடகு வைத்து தலைவராக ஏற்றுக்கொண்ட உன்மத்தன் கோமாளியா? அல்லது ஈஸ்வரன் கோவிலில் உள்ள முருகன் சந்நிதியின் முன்பு நாட்டு மக்களின் நன்மைக்காக, அமைதிக்காக கந்த சஷ்டி கவசம் படித்த உத்தமன் கோமாளியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications