ஐவர்மெக்டின் (ivermectin) மாத்திரையை கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்க கூடாது.. WHO எச்சரிக்கை
சென்னை: ஐவர்மெக்டின் (ivermectin) மாத்திரையை கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்க கூடாது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் பல்வேறு சிகிச்சை முறைகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. முக்கியமாக மலேரியாவிற்கு கொடுக்கப்படும் ஹைடிராக்சிகுளோரோகுயின் மருந்தை பரிந்துரைப்பது விமர்சனங்களுக்கு உள்ளாக்கி உள்ளது.
மேலும் பிளாஸ்மாதெரபி, ரெமிடிஸ்வர் கூட இன்னும் முழுமையாக கொரோனாவிற்கு எதிராக பயனளிக்கும் என்று உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஐவர்மெக்டின் (ivermectin) மாத்திரையும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
மாத்திரை
பல்வேறு வகை ஒட்டுண்ணிகளுக்கு எதிராக கொடுக்கப்படும் இந்த ஐவர்மெக்டின் (ivermectin) மாத்திரையை இந்தியாவில் தமிழகம் உட்பட பல பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். முக்கியமாக வீட்டில் சிகிச்சை பெறும், லேசான அறிகுறி கொண்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஐசிஏம்ஆர் பரிந்துரையின்படி இந்த மருந்து வழங்கப்படுகிறது.
ஏன்
இந்த நிலையில் ஐவர்மெக்டின் (ivermectin) மாத்திரைகளை கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்க கூடாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த மருந்து பாதுகாப்பானது, கொரோனாவிற்கு எதிராக ஆற்றல் மிக்கது என்று நிரூபிக்கப்படவில்லை. இதனால் முழு சோதனை இன்றி இதை மக்களுக்கு கொடுப்பதை உலக சுகாதார மையம் பரிந்துரைக்காது என்று WHOன் தலைமை சைன்டிஸ்ட் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் இல்லை
அதேபோல் இந்த மருந்தை உருவாக்கிய மெர்க் அண்ட் கோ நிறுவனமும், கொரோனாவிற்கு எதிராக எங்கள் மருந்து வேலை செய்யும் என்பதற்கான ஆதாரம் இல்லை. இதற்கான அறிவியல் ரீதியான சோதனை முடிவுகள் எதுவும் இல்லை. இதுவரை எங்களுக்கு இது தொடர்பான வலுவான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
நோயாளிகள்
கொரோனா நோயாளிகளுக்கு ஐவர்மெக்டின் (ivermectin) உதவுவதற்கான, நோயை குறைப்பதற்கான சின்ன ஆதாரம் கூட இதுவரை கிடைக்கவில்லை. ஐவர்மெக்டின் (ivermectin) மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு கொடுப்பதை நாங்கள் பரிந்துரை செய்ய மாட்டோம், என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.