கலைக்க போவது யாரு.. கலக்க போவது யாரு.. இதுதான் இப்போதைய பரபர அரசியல் விவாதம்
ஆட்சியை கலைக்க போவது ஸ்டாலினா, தினகரனா என்பது தற்போதைய பேச்சாக உள்ளது.
Recommended Video
சென்னை: ஆட்சியை முதலில் கலைப்பது யாராக இருக்கும்? மு.க.ஸ்டாலினா? டிடிவி தினகரனா? இதுதான் தற்போதைய அரசியல் வாதமாக பேசப்பட்டு வருகிறது.
எப்படியாவது ஆட்சியை கவிழ்த்துவிட வேண்டும் என்ற ஒரு வருட எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை, 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு தீர்ப்பு வந்த பிறகு அடியோடு துடைத்து போட்டு போய்விட்டது. தற்போது மேல் முறையீட்டுக்குப் போகப் போவதில்லை என்று தினகரன் கூறி விட்டார். இதனால் இடைத் தேர்தல் எப்ப வரும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு பூத்துள்ளது.
ஏன் யோசிக்கவில்லை
எந்த ஒரு வழக்கிலுமே சாதக, பாதக விளைவுகள் ஏற்படதான் செய்யும் என்றும் அதற்கேற்றால்போல் அடுத்த வியூகத்துக்கு தயாராக வேண்டும் என்றும் டிடிவி தினகரன் சிந்திக்காமல் போனதைதான் இந்த குழப்பம் எடுத்து காட்டுகிறது. எதிலேயும் நம்பிக்கை இருக்க வேண்டியதுதான், ஒரு வேளை பாதகமான தீர்ப்பு வந்தால் அதற்கான அடுத்த உத்தி என யோசிக்காதது தான் ஏன் என தெரியவில்லை.
திட்டமிடல் சரியில்லை
நம்மையே நம்பி தங்கள் தொகுதி, எதிர்காலம் என எல்லாவற்றையும் ஒப்படைத்து 18 பேரும் கூடவே இருக்கிறார்களே, அவர்களுக்காகவாவது தினகரன் முன்கூட்டியே சரியான திட்டமிடலை தேர்ந்தெடுத்திருக்கலாம். இப்போது இவ்வளவு குழப்பம் தேவை இல்லை. தற்போது நடக்கும் ஆட்சியை எப்பாடு பட்டேனும் வீழ்த்த தயாராகி வருகிறார். எடப்பாடி ஆட்சியை முதலில் பலவீனப்படுத்துவது, அதை வைத்து அவர்களின் செல்வாக்கை சரிப்பது, இறுதியில் வீழ்த்துவது, இதை நோக்கிதான் டிடிவி தினகரன் காய் நகர்த்தி வருகிறார்.
தினகரன் ஒரு மண் குதிரை.. அவரை நம்பி ஆற்றில் இறங்கலாமா.. அதான் அல்வா கொடுத்துவிட்டார்- ஜெயக்குமார் ]
காப்பாற்ற முடியுமா?
எடப்பாடி தரப்புக்கு ஆட்சிதான் பலமே தவிர கட்சி இல்லை. ஆட்சி இருக்கும் ஒரே பிடிப்புதான் தற்போதுவரை நீடித்து வருகிறது. கட்சியை பலப்படுத்துவது, கட்சியை விரிவுபடுத்துவது, என இது போன்றவற்றில் எடப்பாடி தரப்பு பலவீனமாகவே இருப்பதுதான் இப்போதைக்கு டிடிவி-யிடம் உள்ள ஒரே பிளஸ் பாயிண்ட். எனவே ஆட்சியை கவிழத்து விட்டால் கட்சியை எளிதில் கைக்கு கொண்டு வரலாம் என திட்டம் போடுகிறார். இதற்காக தன்பக்கம் எம்எல்ஏக்களை இழுக்க முடியுமா என முயன்று வருகிறார்.
காய் நகர்த்தல்
மறுபக்கம் ஆட்சியைக் கவிழ்க்கும் வேலைகளில் திமுக இதுவரை ஈடுபடவில்லை. அதேசமயம், ஆட்சி கவிழ்ந்தால் திமுக நிச்சயம் கவலைப்படாது என்பது உறுதி. கருணாநிதி மறைவை அடுத்து ஸ்டாலின் கையில் எடுத்த முக்கியமான காய் நகர்த்தல் அதிமுக அமைச்சர்கள் மீது தொடர்ந்து குற்றஞ்சாட்ட ஆரம்பித்ததுதான். கையும் களவுமாக ஆதாரத்துடன் சிக்கிய விஜயபாஸ்கரை பதவியிலிருந்து விலக்க பலமுறை வலியுறுத்தினால். ஆனால் அதிமுக உறுதியாக நின்று அதை செய்யவில்லை.
பலமான உச்சரிப்பு
இதை தொடர்ந்து அமைச்சர் வேலுமணி மீது ஊழல் புகார் கூறப்பட்டது. இதிலும் எந்த விசாரணையும் இல்லாததால், திமுக இது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகாரே கொடுத்துவிட்டது. இதையடுத்து ஸ்டாலின் டார்கெட் செய்தது தங்கமணியைதான். இப்படி தொடர்ச்சியாக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கையில் எடுக்கவும் அதிர்ந்தே போய்விட்ட ஆளும் கட்சி, இதன்பிறகுதான் ஸ்டாலின்-டிடிவி தினகரன் கூட்டணி என்று பலமாக உச்சரிக்க தொடங்கினார்கள்.
கை கோர்ப்பார்களா?
"நான் முதல்வராக இருக்கிறேன், நீங்கள் துணை முதல்வராக இருங்கள்" என டிடிவியும், ஸ்டாலினும் சேர்ந்து சூழ்ச்சி செய்துவருவதாகவும், இவர்களுக்குள் மறைமுக கூட்டணி இருக்கிறதென்றும், அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தெரிவிக்க தொடங்கினார்கள். அதிமுக தரப்பினரின் பேச்சு நிரூபணம் ஆகும் வகையில் டிடிவி-ஸ்டாலின் செயல்பாடு இருக்குமா? அல்லது தனக்கு தேவையானவர்களை என்ன விலை கொடுத்தேனும் டிடிவி தயாராகி விடுவாரா? என தெரியவில்லை. ஆக மொத்தம் ஸ்டாலின், டிடிவியின் கணக்கு என்னவோ ஒன்றுதான். எனவே இருவரும் கை கோர்ப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது