நம் உரிமை.. நம் கடமை.. உங்க ஓட்டு யாருக்கு ?
சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. நாளை மாலை 7 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளதால் வேட்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் இறுதிக்கட்ட சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா தீவிரமாக பரவி வருவதால் அதை மனதில் கொண்டும், 100 சதவீத வாக்குப்பதிவை கொண்டு வரவும் தேர்தல் கமிஷன் தீவிரமாக முயற்சித்து வருகிறது. கண்காணிப்பு, நடவடிக்கைகள் என தேர்தல் கமிஷனும் வேகமும், கண்டிப்பும் காட்டி வருகிறது.
எத்தனை பேர் போட்டி
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 4534 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 80 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நீலகிரி தொகுதியில் 6 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் சார்பில் 6 பேர் முதல்வர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஓட்டுப்பதிவு இயந்திரம் எப்படி
மூத்த குடிமக்களிடம் பெறப்பட்ட தபால் ஓட்டுக்கள் ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்தி பெறப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டாவுடன் சேர்த்து 16 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே இருக்கும். கூடுதல் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
யார் ஓட்டு அதிகம்
தமிழகத்தில் மொத்தம் ஆறரை கோடி பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதில் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகம். ஏறக்குறைய 10 லட்சம் பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். அனைவரும் ஓட்டளிக்க தேர்தல் தேதியன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் முயற்சி
பண பட்டுவாடாக்களை தடுக்க தேர்தல் கமிஷன் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகிறது. அப்படி இருந்தும் நேற்று ஒரே நாளில் மட்டும் வாகன சோதனையில் ரூ.10.35 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 453 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் நிலை
தேர்தல் கணிப்புக்கள் ஒரு மாதிரியும், தலைவர்களின் பேச்சுக்கள் வேறு மாதிரியும் இருந்து வருகிறது. கட்சி மாறிய பிரபலங்கள், புது முகங்கள், பதவியில் ஏற்கனவே இருந்தவர்கள், தற்போது பதவியில் இருப்பவர்கள் என பல விதமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் யாருக்கு ஓட்டளிப்பது என்ற குழப்பம் வாக்காளர்களிடம் நிலவுகிறது.
தேர்தல் கமிஷன் வேண்டுகோள்
அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. பிரபலங்களும் இதையே வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு எத்தனை தான் விளம்பரம் செய்தாலும், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்பது மக்கள் மனது வைத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதே மறுக்க முடியாத உண்மை.
உங்க ஓட்டு யாருக்கு
யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதில் ஒவ்வொருவரின் தேர்வும் ஒவ்வொருவராக இருக்கலாம். யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்றால் நோட்டாவை கூட தேர்வு செய்யலாம். ஆனால் ஓட்டளிப்பது கட்டாயம் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மட்டுமல்ல, யாரையும் தேர்வு செய்ய விரும்பவில்லை என்பதை சொல்வது உரிமை தான்.
அவசியமா ஓட்டுப் போடுங்க
உரிமை மட்டுமல்ல, நாட்டின் குடிமகன் என்பதை வலிறுத்தும் ஜனநாயக கடமையை நிலை நிறுத்த அனைவரும் ஓட்டளிப்பது அவசியம். கொரோனா பரவல் காலத்தில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, உரிய பாதுகாப்புடன் ஓட்டளிப்பது அவசியம்.