அது ஏன் 6 பேர் மட்டும்?.. ஸ்டார் வேட்பாளர்களை முதல் ஆளாக அறிவித்த அதிமுக.. ஜெ பாணியில் ராஜதந்திரம்!
சென்னை: 2021 சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்துள்ளது.. மற்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் ஆளாக அதிமுக ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இவ்வளவு வேகமாக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவிக்க முக்கியமான சில காரணங்கள் உள்ளது.
நீங்க எல்லாம் பொறுமையா பேச்சுவார்த்தை நடத்துங்க.. நாங்க துரிதமா முடிவு எடுத்துட்டோம் என்று சொல்லும் அளவிற்கு அதிமுக தமிழக தேர்தல் களத்தில் வேகம் காட்ட தொடங்கி உள்ளது. திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்கவில்லை.
காங்கிரஸ், மதிமுகவுடன் திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் அதிமுக முதல்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை எல்லாம் முடித்து மார்ச் 10ம் தேதிதான் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது.
6 பேர்
இந்த நிலையில் மொத்தம் 6 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக முதல்கட்டமாக வெளியிட்டுள்ளது. அதன்படி போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். எடப்பாடி தொகுதியில் முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி போட்டியிடுகிறார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுகிறார். நிலக்கோட்டை தனி தொகுதியில் தேன்மொழி, விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சண்முகம், ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகின்றனர்.
காரணம்
அதிமுகவின் இந்த அதிவேக அறிவிப்புக்கு பின் மூன்று முக்கியமான காரணங்கள் உள்ளது. பொதுவாக தேர்தல் நேரங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல் ஆளாக அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பார். மற்ற கட்சிகள் ஆலோசனையை தொடங்கும் முன்பே ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளை தொடங்கி இருப்பார்.
சிறப்பு
இப்படி செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு வேகமாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஒரு பக்கம் ஏற்படும். இன்னொரு பக்கம் அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் துரிதமாக பணிகளை தொடங்கி பிரச்சாரத்தை ஆரம்பிக்க வசதியாக இருக்கும். நாங்கள் தேர்தலுக்கு ரெடி என்று சொல்லக்கூடிய சைக்கலாஜிக்கல் யுக்தி இது.. இதைத்தான் தற்போது ஓபிஎஸ் - இபிஎஸ் கையில் எடுத்துள்ளனர்.
கூட்டணி
கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் சென்றாலும் இன்னொரு பக்கம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்த 6 தொகுதிகளில் ஸ்ரீவைகுண்டம், நிலக்கோட்டை, விழுப்புரம் போன்ற தொகுதிகளை கூட்டணி கட்சிகள் அதிமுகவிடம் கேட்குமோ என்ற கருத்து நிலவி வந்தது. முக்கியமாக அமைச்சர் சண்முகம் தொகுதியை பாமக கேட்க வாய்ப்பு இருக்கலாம் என்றெல்லாம் கணிப்புகள் உலவி வந்தது.
இடம் கொடுக்கவில்லை
ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் முக்கிய தொகுதிகளை முதல்கட்டமாக அதிமுக எடுத்துக்கொண்டு விட்டது. இது கூட்டணி கட்சிகளுக்கு ஒரு விதமான சமிக்கை ஆகும். ஸ்டார் வேட்பாளர்களின், அமைச்சர்களின் தொகுதிகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிமுக கொடுக்கும் சமிக்கை ஆகும். இன்னொரு பக்கம் அதிமுக தனக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளை விட்டுக்கொடுக்கும் எண்ணத்தில் இல்லை.
வெற்றிவாய்ப்பு
நிலக்கோட்டை, ராயபுரத்தை இன்றே அறிவிக்கவும் இதுதான் காரணம். வாக்கு வங்கி ரீதியாக, ஜாதி ரீதியாக வெற்றி வாய்ப்பு உள்ள எந்த தொகுதியையும் அதிமுக விட்டுக்கொடுக்காது என்கிறார்கள். கூட்டணி ஒதுக்கீடுக்கு முன் அதிமுக அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிடும் என்றும் கருதப்படுகிறது. இதனால் தனக்கு விருப்பமான தொகுதிகளில் அதிமுக கண்டிப்பாக போட்டியிடும் என்கிறார்கள்.
நெருக்கடி
அதிமுகவின் இந்த வேகம் காரணமாக திமுக தற்போது துரிதமாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எப்படியாவது காங்கிரசுடன் டீலிங்கை முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்றுள்ளது. அப்போதுதான் தொகுதி தேர்வு குறித்து திமுக கவனம் செலுத்த முடியும். கூட்டணி ஒதுக்கீடு, பேச்சுவார்த்தையில் தற்போது அதிமுக கொஞ்சம் லீட் எடுக்க தொடங்கி உள்ளது.