இழுபறி நீடிப்பு.. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமையாமல் போனால் அதற்கு காரணம் இதுதான்!
Recommended Video
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியுடன், அதிமுக கூட்டணி அமைப்பதில் பெரும் சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடப்பதாக ஓபிஎஸ் கூறியிருந்தார். ஒரு சில தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக நடுவே யார் போட்டியிடுவது என்பதில் தீவிரமாக இழுபறி இருந்து வருகிறது. மதுரை, தஞ்சை, கிருஷ்ணகிரி, தென்சென்னை போன்ற தொகுதிகளை இவ்வாறு சுட்டிக் காட்டுகிறார்கள் இரு கட்சிகளும் நெருக்கமாக உள்ளவர்கள்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது நாடு முழுக்க நரேந்திர மோடி அலை வீசியது. மோடியுடன், ஜெயலலிதாவிற்கு நட்பும் இருந்தது. இருந்தாலும் கூட பாஜகவை தனது கூட்டணியில் அதிமுக சேர்த்துக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் உச்சமாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது, மோடியா அல்லது இந்த லேடியா என்பதை பார்த்துவிடுவோம் என்று ஜெயலலிதா சவால் விடும் வகையில் பேசினார்.
அதிமுகவின் அமோக வெற்றி
இப்போது ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில், மோடியின் பாஜக உடனே அதிமுக கூட்டணி அமைத்து கொள்ள வற்புறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் அதிமுகவுக்கு ஒரு மாபெரும் தலைவலி நீடித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 38 இடங்களில் அதிமுக வென்றது.
எம்பிக்கள் அதிருப்தி
இம்முறை கூட்டணி அமைத்து போட்டியிட்டால், சுமார் 20 முதல் 23 தொகுதிகள் வரையில் மட்டுமே அதிமுக போட்டியிடும் சூழ்நிலை ஏற்படும். எனவே, மிச்சமுள்ள தொகுதிகளில் சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க முடியாத சூழ்நிலை அதிமுகவுக்கு ஏற்படுகிறது. அதிமுக, கூட்டணி அமைத்து போட்டியிட்டால், தனது, பெருவாரியான சிட்டிங் எம்பிக்களை பகைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும்.
திமுகவுக்கு பிரச்சினை இல்லை
திமுக அல்லது காங்கிரசை பொறுத்தளவில் கடந்த லோக்சபா தேர்தலில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. எனவே அங்கு தொகுதி பங்கீடு அதிமுகவை விட எளிதாக நடைபெறும் வாய்ப்பு உள்ளது. தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு, அதையே காரணமாக கூறி, மீண்டும் தொகுதியை ஒதுக்காமல் தட்டிக்கழித்துவிட முடியும். கூட்டணி கட்சிகளுக்கு, தொகுதியை விட்டுக் கொடுக்க திமுகவிற்கு நிறையவே, சான்ஸ் உள்ளது.
தினகரன் பக்கம்
ஏற்கனவே அதிமுக பிளவுபட்டு, தினகரன் தலைமையில் ஒரு அணி செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தொகுதி பங்கீட்டின் போது அதிருப்தி அடையக் கூடிய அதிமுக எம்பிக்கள், தினகரன் பக்கம் தாக்கக் கூடும் என்ற அச்சம் அதிமுகவிடம் உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் கூறுகையில், தேர்தல் நடைபெறும்போது எத்தனை பேர் கட்சித்தாவப்போகிறார்கள் பாருங்கள் என கூறிய கருத்து இந்த இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.
நஷ்டம்தான் அதிகம்
ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டங்களில் அவர் கைநீட்டுபவர்தான் வேட்பாளராக போட்டியிட முடியும். வாய்ப்பு கிடைக்காதவர்கள் எதிர்த்து குரல் கொடுப்பது என்பது கனவிலும் நடக்காத விஷயம். ஆனால் இப்போது இரட்டை தலைமையில் அதிமுக இயங்கி வருகிறது. எனவே ஜெயலலிதா தலைமையை போன்று மிகவும் கட்டுக்கோப்புடன் அவர்களை சமாளிப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது. இதனால் அதிமுக மற்றும் பாஜக நடுவேயான தொகுதி பங்கீட்டால் லாபத்தை விட நஷ்டம்தான் அதிகம் என அதிமுகவில் ஒரு தரப்பு நினைக்கிறது. பாஜகவிற்கு எதிராக தமிழகத்தில் அலை வீசுவதால், பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிடுவதுதான் கட்சிக்கு நல்லது. தேவையென்றால் தேர்தலுக்கு பிறகு ஆதரவு அளிக்கலாம் என அதிமுக தலைவர்களில் ஒரு பிரிவினர் கூறி வருகிறார்களாம்.