நயினாரால் வந்த வம்பு.. பாஜக கேட்ட இடங்களை கொடுக்க தயங்கும் அதிமுக! இழுபறியில் முடிந்த பேச்சுவார்த்தை
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- பாஜக இடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தை 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து தற்போது முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியே மாறிப்போன பாஜக.. "அதிமுக சிறந்த எதிர்க்கட்சி.." வாயார புகழ்ந்து பேட்டியளித்த அண்ணாமலை!
அதிமுக- பாஜக இடையே மோதல்கள்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக எம்எல்ஏக்களின் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தார். இதனால் சமூகவலைதளங்களிலும் விவாதங்களிலும் அதிமுக- பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
பாஜக கூட்டணி
மேலும் சில அதிமுக நிர்வாகிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டது. இதனால் அதிமுக- பாஜக இடையே கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும் இன்றைய தினம் பாஜகவை பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைத்தது.
பேச்சுவார்த்தை
அதன்படி இந்த கட்சிகள் இடையேயான இடபங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. தற்போது 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்னமும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலரை கேட்ட போது மேயர் பதவியை கருத்தில் கொண்டு மாநகராட்சிகளில் அதிக இடங்களை ஒதுக்கிடுமாறு பாஜக கேட்பதாக தெரிகிறது.
அதிமுக மீது விமர்சனங்கள்
ஆனால் அதிமுக தலைமையோ அதற்கு மறுப்பு தெரிவிக்கிறதாம். அதிமுக மீது விமர்சனங்களை முன் வைத்த பாஜகவுக்கு இத்தனை இடங்களை ஒதுக்கினால் அது தேவையில்லாமல் கட்சி நிர்வாகிகளின் அதிருப்தியை சந்திக்க நேரிடும் என அதிமுக கருதுகிறதாம். மேலும் அது தங்கள் வெற்றியை பாதிக்கும் என்று அதிமுக கருதி அள்ளி கொடுக்காமல் கிள்ளி கொடுக்கவே முடிவு செய்துள்ளனராம்.
பேரூராட்சிகள்
வேண்டுமானாலும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் கணிசமான இடங்களை பாஜகவுக்கு ஒதுக்க தயாராம். ஆனால் அதில் ஒரு கண்டிஷனாம். அதிமுகவினருக்கு வழங்கும் இடங்களில் இருந்து பாஜகவுக்கு இடங்களை ஒதுக்குவதால் பாஜக வெற்றி பெற வேண்டும் என்கிறதாம் அதிமுக என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் 3 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றால் பாஜக கேட்ட இடங்களை அதிமுக தரவில்லை என்று தெள்ள தெளிவாக தெரிகிறது. இதனால் தான் பாஜக தலைவர் அண்ணாமலையும் பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்துள்ளார். அடுத்த லோக்சபா தேர்தல் 2024 வரை அதிமுகவின் கூட்டணி தேவை என பாஜக மேலிடம் நினைக்கிறது. அதிமுக கூட்டணியில் தமிழகத்திலிருந்து பாஜகவுக்கு அதிக எம்பிக்களை பெற திட்டமிட்டுள்ளது. இதனால் அதிமுகவை பகைத்துக் கொள்ளவும் முடியாமல் அது கொடுக்கும் இடங்களை ஏற்கவும் முடியாமல் பாஜக உள்ளதாகவே கருதப்படுகிறது.