எடப்பாடியை கூப்பிட்டீங்களா? சட்டென முகத்தை பார்த்து கேட்ட ஓபிஎஸ்! ஜெ.தீபா தந்த ரியாக்சன்! என்னாச்சு
ஓபிஎஸ் - ஜெ. தீபா சந்திப்பின் பின்னணி வேறு என்கிறார்கள் தீபாவிற்கு நெருக்கமானவர்கள்.
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, ஓபிஎஸ்ஸை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கு பின் முக்கியமான ஒரு காரணம் இருப்பதாக தீபாவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தமிழ்நாடு அரசியல் களத்தை தீ பிடிக்க வைத்துள்ளது. தளபதி 67 அப்டேட்டை விட.. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்காக நொடிக்கு நொடி வரும் அப்டேட்கள்தான் அதிக சுவாரசியமாக இருக்கின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஓபிஎஸ் அணி சார்பிலும், ஈபிஎஸ் அணி சார்பிலும் நேற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கி உள்ளது.
எகிறும் பிரஷர்.. பாஜகவால் ஈரோடு கிழக்கு தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியில் குழப்பம்.. அடுத்து என்ன?
சின்னம் முடக்கம்
இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கில் பாஜகவிற்கு காத்திருக்காமல் கே. எஸ் தென்னரசை எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களின் அதிமுக அணி வேட்பளாரை அறிவித்து உள்ளது. இதனால் சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இரண்டு தரப்பும் வேட்பாளரை களமிறக்கி உள்ளது. இதனால் இரண்டு வேட்பாளருக்கும் பி பார்மில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் கையெழுத்து போட மாட்டார்கள். எனவே இரண்டு தரப்பிற்கும் சின்னம் முடங்கும் வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் இரண்டு தரப்பிற்கும் பொதுவான சின்னம் தனி தனியாக வழங்கப்படலாம். பொது சின்னம் கிடைக்கும் பட்சத்தில் உண்மையில் யார் பலசாலி என்பதும் கொஞ்சம் தெரிந்துவிடும்.
தீபா சந்திப்பு
இந்நிலையில்தான் தீபா சென்று ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பால் ஜெ.தீபா, ஓபிஎஸ்க்கு ஆதரவு வழங்குவாரா என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதாவது தீபா மீண்டும் அரசியலுக்கு வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஜெ தீபா மீண்டும் அரசியலில் தலைகாட்டவோ, அதிமுகவில் நுழையவோ விரும்புகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரின் இந்த சந்திப்பு பல யூகங்களை கிளப்பி விட்டு இருக்கிறது.
யூகங்கள்
ஆனால், இந்த சந்திப்பின் பின்னணி வேறு என்கிறார்கள் தீபாவிற்கு நெருக்கமானவர்கள். தீபாவுக்கும் மாதவனுக்கும் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா, சனிக்கிழமை (5-ந்தேதி) அன்று சென்னையில் வைத்திருக்கிறார். அந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என ஓபிஎஸ்சை சந்தித்து அவரை அழைதுள்ளார் தீபா. ஓபிஎஸ் - தீபா தொடக்கத்தில் இருந்தே மோதலில் ஈடுபடாமல் உள்ளனர். தர்ம யுத்தம் காலத்தில் கூட இவர்கள் மோதிக்கொள்ளவில்லை.
அழைப்பிதழ்
இந்த நிலையில் அழைப்பிதழை வழங்கவே ஓபிஎஸ்சை தீபா சந்தித்துள்ளார். ஆனால் இந்த சந்திப்பில் வெறும் அழைப்பிதழோடு எல்லாம் முடிந்து போகவில்லை. அந்த சந்திப்பில் அரசியலும் பேசப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை அழைத்திருக்கிறீர்களா.. அவரும் வருவாரா? என தீபாவிடம் ஓபிஎஸ் கேட்டுள்ளார். இதனால் ஒருசமயம் தீபா யோசனையில் ஆழ்ந்து உள்ளார். எடப்பாடியை அழைத்தால் ஓ பன்னீர்செல்வம் வர மாட்டாரோ என்று தீபா யோசிக்க தொடங்கி உள்ளார். இதையடுத்து பதில் சொன்ன தீபா, " இல்லை.. இதுவரை அவரை அழைக்கவில்லை" என்று சொல்லி இருக்கிறார். " தவிர்க்காதீர்கள். அவரையும் அழையுங்கள்" என்றாராம் ஓபிஎஸ் ! ஆனால், எடப்பாடியை நேற்று வரை அழைக்கப்படவில்லை.