ராதாகிருஷ்ணனை ஏன் "டிரான்ஸ்பர்" செய்தீங்க.. என்னாது, ரூ.100 கோடியா.. திமுகவை நறுக்கென கேட்ட யுவராஜ்
சென்னை: கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டக கொள்முதல் டெண்டரில் 100 கோடி ரூபாய் லஞ்சம் கை மாறியதாக அறிக்கை வெளியிட்டு இருக்கும் நிலையில் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது ஏன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
நேற்றைய தினம், தமிழக அரசு திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.. அதில், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது.
அத்துடன், வணிகவரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, தருமபுரி, திருச்சி, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 51 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
தமிழகம்:37 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்- சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இட மாற்றம்!
டிரான்ஸ்பர்
இந்த டிரான்ஸ்பர் விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது... குறிப்பாக சுகாதாரத்துறை செயலர் ஏன் மாற்றம் செய்யப்பட வேண்டும்? என்ன நடந்தது? பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.. மற்றொருபக்கம், அவராகவே டிரான்ஸ்பர் கேட்டு கொண்டிருந்தார், அந்த விருப்பத்தின்பேரில்தான் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றும் தகவல்கள் பரபரத்து வருகின்றன.. எனினும் இதுகுறித்து தெளிவான மற்றும் உறுதியான காரணங்கள் சொல்லப்படவில்லை.. இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளது.
யுவராஜா
இக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் யுவராஜா, திமுக அரசின் ஊழல்களை மறைக்கவே ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:
திடீர் டிரான்ஸ்பர்
"திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மாறாக தங்களுக்கு சாதகமில்லாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கொத்துக்கொத்தாக பணியிடமாற்றம் செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நேற்று (12.06.2022) இரவு 51 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சூப்பர் பணி
தமிழக அரசு சுகாதாரத் துறைச் செயலாளராக முந்தைய அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர் திமுக ஆட்சியிலும் சுகாதாரத் துறைச் செயலாளராக தொடர்ந்து வந்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணிகளை செய்ததால் பொது மக்கள் இடத்தில் இவருக்கு நல்ல பெயரும், பாராட்டும் கிடைத்தது... தமிழகத்தில் கொரோனா தொற்று கணிசமாக குறைக்கப்பட்டதற்கு இவருக்கும் பங்கு உண்டு அப்படியிருந்தும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறிகுறியா?
கொரோனாவின் 3-வது அலை இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், மீண்டும் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது 4-வது அலைக்கான அறிகுறியா? என்று மக்களிடையே அச்சம் உருவாகியுள்ள சூழலில் கடந்த ஆண்டுகளில் திறம்பட செயல்பட்டு ராதாகிருஷ்ணன் அவர்கள் கொரோனாவை சிறப்பாக கையாண்டார் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரை மாற்றுவதற்கான காரணம் என்ன?
100 கோடியா?
அண்மையில் தமிழக எதிர்க்கட்சிகள் மக்கள் நல்வாழ்வுத்துறை நடக்கும் முறைகேடுகள் குறித்து ஆதாரங்களை வெளியிட்டார்கள்.. கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டக கொள்முதல் டெண்டரில் 100 கோடி ரூபாய் லஞ்சம் கை மாறியதாக அறிக்கை வெளியிட்டு இருக்கும் நிலையில் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது? இதன் காரணமாக ஊழல் செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு விடுவார்களோ? என்ற பயத்தில் திமுக அரசு இந்த துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தோன்றுகிறது. தமிழக அரசு இதற்குண்டான விளக்கத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
இதனிடையே ராதாகிருஷ்ணன் மாற்றம் குறித்து சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் பரபரத்து வருகின்றன.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சுகாதாரத் துறையில் முறைகேடுகள் நடப்பதாக சில தகவல்களை எடுத்துவைத்திருந்த நிலையில், 2ம் கட்ட அதிகாரிகள் மூலமே அந்தத் தகவல்கள் அண்ணாமலைக்குக் கிடைத்ததாகவும், ராதாகிருஷ்ணனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அதனாலேயே இந்த மாற்றம் என்றும் கூறப்படுகிறது.
Recommended Video
நல்ல துறை
மற்றொருபக்கம், ராதாகிருஷ்ணன் மாற்றம் என்பது வழக்கமான அரசின் நடைமுறையே.. தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், தர்மபுரி கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளதை போலதான், ராதாகிருஷ்ணனும் மாற்றப்பட்டுள்ளார்.. அதுமட்டுமல்ல, ராதாகிருஷ்ணன் இன்னொரு துறைக்கும் செயலாளராகத்தானே போயிருக்கிறார்.. கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு என்பது மக்களோடு மேலும் அவர் தன்னை நெருக்கப்படுத்திக் கொள்ளக்கூடிய, ஐக்கியப்படுத்திக்கொள்ளக்கூடிய துறைதான்.. அது மிகவும் நல்ல துறை என்பதால்தான் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது" என்கிறார்கள்.