போனா போகட்டும்.. டேட்டாவை நீட்டி இபிஎஸ் வைத்த கிடுக்குபிடி செக்.. வெளியேறிய தேமுதிக.. நடந்தது என்ன?
சென்னை: தமிழக அரசியலில் நாளுக்கு ஒரு டிவிஸ்ட் நடப்பது இப்போதெல்லாம் இயல்பாகிவிட்டது.. அந்த வகையில் இன்று நடந்த டிவிஸ்ட்தான் அதிமுக - தேமுதிக கூட்டணி முறிவு. அதிமுக கூட்டணிக்கு எப்படியும் தேமுதிக வந்துவிடும் என்று இன்றுதான் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் சொன்னார்.. ஆனால் அதற்குள் தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.. இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது?
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் வெளியேறுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலை இரண்டு கட்சிகளும் ஒன்றாக சந்தித்தது.
இந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. முக்கியமாக பாஜகதான் அதிமுக - தேமுதிக இடையே இணைப்பு பாலம் போல செயல்பட்டு வந்தது. ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில் கூட்டணி முறிந்துள்ளது.
என்ன காரணம்
அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகுவதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 3 சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இந்த முடிவு செய்யப்படுவதாக விஜயகாந்த் கூறியுள்ளார். மிகவும் நொந்து போய்தான் தேமுதிக இந்த முடிவை எடுத்து இருக்கிறதாம்.
என்ன நடந்தது
முதலில் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக 40 தொகுதிகள் கேட்டது. ஆனால் இதை அதிமுக கொடுக்க முன்வரவில்லை. வாய்ப்பே இல்லை. 14 தொகுதிகள்தான் கொடுப்போம் என்று தேமுதிகவிடம் அதிமுக கூறியுள்ளது. இதையடுத்து 25 தொகுதி + 1 ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று தேமுதிக கேட்டுள்ளது.
தேமுதிக இறங்கி வந்தது
தேமுதிக இப்படி இறங்கி வந்தாலும் அதிமுக இறங்கி வரவில்லை. ராஜ்ய சபா சீட்டுக்கு வாய்ப்பு இல்லை.14 சீட் வேண்டுமானால் கொடுப்போம் அவ்வளவுதான் என்று கூறியுள்ளது. அந்த பக்கம் திமுக 180+ தொகுதிகளில் களமிறங்குகிறது. தேமுதிகவுக்கு அதிக இடம் கொடுத்தால் அதிமுகவால் 180 இடங்களில் எல்லாம் போட்டியிட முடியாது.
போட்டியிட முடியாது
திமுகவிற்கு இணையாக போட்டியிட வேண்டும் என்று அதிமுக நினைக்கிறது. இதன் காரணமாகவே தேமுதிகவுக்கு 14 இடங்களை கொடுப்போம் என்று கூறியது. அதோடு முதல்வர் இதில் விடாப்பிடியாக இருந்துள்ளார். உங்களுக்கு வாக்கு வங்கி இல்லை.. 14 இடங்கள்தான் உங்களுக்கு பாதுகாப்பு.. எங்களுக்கும் பாதுகாப்பு என்று முதல்வர் கூறியுள்ளார்.
அதிரடி
இதற்கான டேட்டாவையும் முதல்வர் பழனிசாமி தேமுதிகவிடம் நீட்டி இதுதான் உங்கள் பலம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். முதல்வர் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார். இதன் பின்பே தேமுதிக வேறு வழியே இல்லாமல் இன்று ஆலோசனை நடத்தி அதன்பின் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த காரணத்தால் தேமுதிக வெளியேறி உள்ளது.