"மாத்திடுங்க".. வேக வேகமாக முறையிட்ட ஓபிஎஸ்.. "சான்ஸே இல்லை".. பறந்து வந்த உத்தரவால் எடப்பாடி குஷி!
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட உள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணை பற்றிய முக்கிய உத்தரவு ஒன்று வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவிற்கு எதிராக ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
ஜூலை 13ம் தேதி ஓபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இதை சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வு விசாரிக்கட்டும் என்று கூறியது.
நிரம்பி வழியும் வைகை அணை..7 பிரதான மதகுகளில் உபரிநீர் திறப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை
தனி நீதிபதி
இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் தனி நீதிபதி விசாரிக்கட்டும். உச்ச நீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகள் உயர் நீதிமன்ற விசாரணையை பாதிக்க கூடாது. 2 வாரங்களுக்குள் வழக்கை தனி நீதிபதி விசாரித்து முடிவு எடுக்க வேண்டும். பொதுக்குழு நடத்துவது பற்றி நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.உச்ச நீதிமன்ற உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
தனி நீதிபதி யார்?
அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளும் இதனால் தனி நீதிபதி அமர்விற்கு மாற்றப்படும். வழக்கு விசாரணை தொடக்கத்தில் இருந்து புதிதாக விசாரிக்கப்படும். இந்த வழக்கு மிக முக்கியமானது ஆகும். ஏனென்றால் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று இந்த வழக்கில் அறிவிக்கப்பட்டால் மொத்தமாக எல்லாமே தலைகீழாக மாறிவிடும். பொதுக்குழுவே செல்லாது என்றால் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லாது. அதாவது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி நீடிக்க முடியாது.
சிக்கல்
இந்த நிலையில்தான் வழக்கில் தனி நீதிபதி யார் என்ற கேள்வி நிலவியது. கடந்த பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் விசாரித்தார். கடந்த வழக்கு விசாரணையின் போது, பொதுக்குழுவை நடத்த உச்ச நீதிமன்றமே அனுமதித்துவிட்டதால் நான் அதை எப்படி தடை செய்வது. கட்சியில் பெரும்பான்மைதான் முக்கியம். இதனால் ஓபிஎஸ் பொதுக்குழுவைத்தான் நாட வேண்டும். மாறாக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக கூடாது என்று கூறினார்.
முறையீடு
இதையடுத்து மீண்டும் பொதுக்குழு தொடர்பான வழக்கு அதே நீதிபதியின் கீழ் பட்டியலிடப்படுவதாக நேற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார். இதை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு நேற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சேம்பரில் முறையிட்டது. நீதிபதி கிருஷ்ணன் ஏற்கனவே ஓபிஎஸ்ஸுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளதால், புதிதாக விசாரிக்கப்படும் வழக்கில் இவர் தனி நீதிபதியாக இருக்க கூடாது என்று கோரிக்கை வைத்தது.
மாற்ற வேண்டும்
நீதிபதி கிருஷ்ணன் மாற்றப்பட்டு வேறு நீதிபதி கீழ் வழக்கு பட்டியலிடப்பட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி இதை மறுத்துவிட்டார். வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்ற முடியாது. அந்த எண்ணம் இல்லை. ஒற்றை நீதிபதி கிருஷ்ணன் இந்த வழக்கை விசாரிப்பார் என்று கூறியுள்ளார். இது ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நீதிபதி கிருஷ்ணன் பொதுக்குழுவிற்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்தவர் என்பதால் இந்த வழக்கிலும் தீர்ப்பு மாறாது என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இருக்கிறது.