நாடாளுமன்றத்தில் மோடி வைத்த செங்கோலுக்கும் சோழருக்கும் தொடர்பே இல்லை! எப்படி தெரியுமா? ஷாக் பின்னணி
சென்னை: புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள தமிழ்நாட்டின் செங்கோலுக்கும் சோழர்கள் ஆட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை சோழா செங்கோல் என்று அழைத்தாலும் அதற்கும் இதற்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை.
டெல்லியில் ரூ21,000 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் கூடிய செயலகமான சென்ட்ரல் விஸ்டா திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே காலை 7.30 மணிக்கு பூஜையுடன் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வு தொடங்கி சற்று முன் நடந்து முடிந்தது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 1947-ம் ஆண்டு செங்கோல் நிறுவப்பட்டது.
மேலும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழ்நாட்டின் 21 ஆதீனங்களின் மடாதிபதிகள் பங்கேற்றனர். 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்வை புறக்கணித்தனர். புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உரைகள் வாசிக்கப்படும்.
செங்கோல் பின்னணி:
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் பிரதமர் மோடி பிற்பகல் 2.30 மணிக்கு உரையாற்றுகிறார். இந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவில், மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அடுத்ததாக தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவுவார் என்று குறிப்பிட்டார்.
அமித் ஷாவின் இந்த பேட்டி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர் லால் நேருவிடம் ஆகஸ்ட் 14, 1947 இரவு சுமார் 10:45 மணிக்கு செங்கோல் வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து நம் நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாறியதற்கான அறிகுறியாக இந்த செங்கோல் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஆதினம் மூலம் இந்த செங்கோல் வழங்கப்பட்டது என்று அமித் ஷா குறிப்பிட்டு இருந்தார்.

செங்கோல் என்றால் என்ன?
அமித் ஷா இப்படி சொன்னதும் இணையம் முழுக்க பலரும் இந்த செங்கோல் குறித்து தேட தொடங்கி உள்ளனர். இந்த செங்கோலின் பின்னணி குறித்து தேட தொடங்கி உள்ளனர்.
பலரும் இதை சோழர் கால செங்கோல் என்றும் கூறி உள்ளனர். சோழர் காலத்தில் அரசர்கள் செங்கோல் பயன்படுத்தியது உண்மை. நல்ல ஆட்சிக்கு அறிகுறியாக, மன்னர் ஆட்சிக்கு அறிகுறியாக செங்கோல் பார்க்கப்பட்டது.
ஆனால் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு உள்ள தமிழ்நாட்டின் செங்கோலுக்கும் சோழர்கள் ஆட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை சோழா செங்கோல் என்று அழைத்தாலும் அதற்கும் இதற்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை.
ஆவணங்கள் சொல்வது என்ன?
பாஜக தலைவர்களின் கருத்துக்களின், சுதந்திரத்திற்கு சற்று முன்பு, இந்தியாவின் கடைசி லார்ட்டாக இருந்த மவுண்ட்பேட்டன்தான் நேருவிடம் ஆட்சி மாறுவது தொடர்பாக கூறி உள்ளார். ஆங்கிலேயரிடமிருந்து இந்தியர்கள் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படுவதைக் குறிக்கும் வகையில் விழா எடுக்க வேண்டும் என்று நேருவிடம் கூறியுள்ளார்.
அப்போது சென்னையில் முதல்வராக இருந்த ராஜகோபாலாசாரியிடம் ஆலோசனை மேற்கொண்ட நேரு, செங்கோல் குறித்து தெரிந்து கொண்டார். சோழர்கள் காலத்தில் இப்படி செங்கோல் இருந்தது. ஆட்சி மாறும் போது அதை மாற்றுவார்கள். அதை இப்போது நாம் பயன்படுத்தலாம். ஆங்கிலேயர் ஆட்சி முடிவிற்கு வந்ததன் அறிகுறியாக இதை செய்யலாம் என்று ராஜாஜி குறிப்பிட்டு உள்ளார்.
ஒப்புக்கொண்ட நேரு:
இதையடுத்து அதேபோல் செங்கோலை பெற்றுக்கொள்ள நேரு ஒப்புக்கொண்டுள்ளார். நேரு ஒப்புக்கொண்டவுடன், ராஜாஜி உடனே செங்கோலை தயார் செய்யும் பணிகளை மேற்கொண்டார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை இந்த செங்கோலை உருவாக்குவதற்கான உதவிக்காக அணுகினார் ராஜாஜி.
அவர்களின் ஆலோசனையின்படி சென்னையைச் சேர்ந்த "வும்மிடி பங்காரு செட்டி" நகைக்கடை நிறுவனம் இந்த செங்கோலை உருவாக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதில் ராஜாஜி செங்கோல் செய்ய சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
"வும்மிடி பங்காரு செட்டி" நிறுவனத்தின் வும்மிடி எத்திராஜுலு மற்றும் வும்மிடி சுதாகர் ஆகியோர் இணைந்து இதை உருவாக்கினார்கள். இவர்கள் இப்போதும் உயிருடன் உள்ளனர். 5 அடி நீளம் உள்ள இந்த செங்கோலின் தலை பகுதியில் நந்தி சிலை இருக்கும்.
இந்த செங்கோல் உருவாக்கப்பட்ட பின், ஆதீனத்தின் துணைத்தலைவர், நாதஸ்வர கலைஞர் ராஜரத்தினம் பிள்ளை மற்றும் ஓதுவார் உட்பட மூன்று பேர் புதிதாகத் தயாரிக்கப்பட்ட செங்கோலை தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு கொண்டு சென்றனர். ஆகஸ்ட் 14, 1947 அன்று நடந்த இந்த விழாவின் போது, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலைக் கொடுக்கப்பட்டது.
பின்னர் அந்த செங்கோலை மவுண்ட் பேட்டன் நேருவிடம் கொடுத்தார். ஆனால் இதற்கும் அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாக அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேரு வீட்டில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ் பாடல்கள் பாடப்பட்டு செங்கோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
7ஆம் நூற்றாண்டு தமிழ் துறவி திருஞான சம்பந்தர் மூலம் இயற்றப்பட்ட பாடல் இந்த நிகழ்வில் பாடப்பட்டது. அதன்பின் டெல்லியில் இருந்து அலஹாபாத் மியூசியத்திற்கு நேரு இறந்த பின் செங்கோல் கொண்டு செல்லப்பட்டது.
செங்கோல் அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஜவஹர்லால் நேருவுடன் தொடர்புடைய பல வரலாற்று பொருட்களுடன், அருங்காட்சியகத்தின் நேரு கேலரியின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டு இருந்தது. அங்கேதான் செங்கோலும் இருந்தது.












Click it and Unblock the Notifications