ஓபிஎஸ் டீமின் நெக்ஸ்ட் ஆக்ஷன்.. ‘மொத்தமா வாங்க’.. ஓவர்டேக் செய்யும் பன்னீர்.. கசிய விட்ட ஆதரவாளர்!
சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அடுத்தகட்ட 'மூவ்'களை மேற்கொள்வது பற்றி ஆலோசிப்பதற்காக, ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்களைக் கூட்டவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நிலவி வரும் நிலையில், அதிமுகவில் புதிய அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர ஒன்றரை மாத காலம் இருக்கும் நிலையில், கட்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார் ஓபிஎஸ்.
அந்தவகையில், விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் நடத்தவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் ஓபிஎஸ் டீம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈபிஎஸ்
அதிமுக விவகாரத்தில், உச்ச நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவை என்ன முடிவு எடுக்கப் போகின்றன என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்கிறோம் என பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய பிரமாணப் பத்திரங்களை, தேர்தல் ஆணையத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பு சமர்ப்பித்தது.

கூட்டம்
மேலும், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என ஈபிஎஸ் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியானது. இதனால், அதிமுக தலைமை அலுவலகம் அல்லது சென்னையை ஒட்டிய பகுதிகளில் மா.செக்கள் கூட்டம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், தற்போதைக்கு பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டார் ஈபிஎஸ்.

புயல் வேகம்
அதே நேரத்தில், கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கையில் புயல் வேகத்தில் இறங்கியுள்ளார் ஓபிஎஸ். சமீபத்தில் அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார். சில நிமிடங்களிலேயே பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. எனினும், எதற்கும் அசராமல் பண்ருட்டியாருடன் ஆலோசனை, அடுத்தகட்ட நிர்வாகிகள் பட்டியல் என பரபரத்து வருகிறார் ஓபிஎஸ்.

புதிய நிர்வாகிகள்
அடுத்த அதிரடியாக தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியல், கட்சியில் உள்ள பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். மொத்தமாக 36 பேரை முக்கியமான பதவிகளில் நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். விழுப்புரம், கடலூர், ஈரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவள்ளூர், கரூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு அதிமுகவின் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்நிலையில், அனைத்து மாவட்ட செயலாளர்களையும் நியமித்ததும், சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தவும் ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ்ஸுக்கு மிகவும் நெருக்கமான புள்ளியான ஜேசிடி பிரபாகரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பாளர் எனவும் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

10 லட்சம் - பரபர ஆக்ஷன்
தேர்தல் ஆணையத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில், 10 லட்சம் அதிமுக உறுப்பினர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெறும் வேலையில் இறங்கியிருக்கிறது ஓபிஎஸ் டீம். அந்தப் பணியை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே எல்லா மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நடைபெற இருக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்தப் பணிகள் குறித்து விளக்கி, தீவிரமாக பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications