துரை வைகோ நியமனம் ஏன்? எனக்கு மரணம் வரை ஓய்வு கிடையாது .. வைகோ பரபரப்பு பேட்டி
சென்னை: எனக்கு விருப்பம் இல்லாததால் தடுத்து வைத்தேன். ஆனால் தொண்டர்கள் அவரை பற்றிக்கொண்டார்கள். இன்றைய சூழ்நிலை தானாக உருவாகிவிட்டது. நான் எதிர்பார்த்ததைவிட தொண்டர்களை வசீகரிக்ககூடிய திறமை துரை வைகோவிற்கு இருக்கிறது என்று துரை வைகோ மதிமுக தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் புதன்கிழமை மாலை மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 106 பேர் பங்கேற்ற நிலையில் துரை வையாபுரிக்கு ஆதரவாக 104 பேர் ரகசிய வாக்கெடுப்பில் வாய்ப்பு கொடுக்கலாம் என வாக்களித்தனர். இதையடுத்து துரை வையாபுரி மதிமுக தலைமைக் கழகச்செயலாளராக நியமிக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், " துரை வைகோ மதிமுகவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றி வந்தார் . எனக்கு தெரியாமலேயே துரை வைகோ கட்சி பணியில் ஈடுபட்டு வந்தார். அவரை முழுமையாக கழக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று எல்லா மாவட்டத்திலும் சென்ற இடங்களில் எல்லாம் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் வற்புறுத்த ஆரம்பித்தார்கள்.

இரண்டு கேள்வி
தொண்டர்களின் தியாகத்தினாலேயே இந்த கட்சி உருவானது. எனவே மறுமலர்ச்சி திராவிட பணிகளில் துரை வைகோவிற்கு வாய்ப்பு வழஙக வேண்டும், வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று இரண்டு கேள்விகளுடன் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தோம். அந்த வாக்கெடுப்பில் அரசியல் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்கள். இந்த வாக்கெடுப்பில் 106 பேர் கலந்து கொண்டனர். இதில் 104 பேர் துரை வைகோவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வாக்குகள் வந்தது. 2 வாக்குகள் வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று வந்தது.

104 வேர் வாக்களிப்பு
பொதுவாக மதிமுக சட்ட திட்ட விதிகளின் படி நானே பொதுச்செயலாளர் என்ற முறையில் பொறுப்புகளில் ஒருவரை நியமனம் செய்யலாம். இதில் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும் கருத்துக் கேட்டேன். பெரும்பான்மை உறுப்பினர்கள், துரை வைகோவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வாக்களித்தனர். இதனால் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கலாம் என்று யோசித்தேன். இதையடுத்து மதிமுக தலைமைக் கழகச்செயலாளராக துரை வைகோ நியமனம் செய்யலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி அவர் நியமிக்கப்படுகிறார்.

என்ன வேலை
தலைமை கழக செயலாளர் என்றால், தலைமை கழகத்தில் வந்து வேலை செய்வது, இங்கே வந்து தொண்டர்களை கடிதங்களை பார்ப்பது, ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் நடவடிக்கைகளை கண்காணிப்பது, ஒவ்வொரு மாவட்டத்துடனும் தொடர்பில் இருப்பது, தலைமை கழகம் எடுக்கும் முடிவுகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்புவது போன்ற பணிகளை செய்ய வேண்டும். அவர் சுற்றுப்பயணம் செய்யலாம் என்றார்.
Recommended Video

தொண்டர்கள் விருப்பம்
அப்போது வைகோவிடம் ஒரு செய்தியாளர், நீங்கள் வயோதிகம் காரணமாக இந்த முடிவினை எடுத்தீர்களா என்று கேட்டார். அதற்கு வைகோ,நான் வயோதிகம் காரணமாக இந்த முடிவினை எடுக்கவில்லை. உங்களை விட ஒன்றும் வயதானவன் இல்லை. இப்போது கூட வாலிபால் விளையாட சொன்னால் விளையாடுவேன். இது வாரிசு அரசியலே இல்லை. கட்சி தொண்டர்கள் விருப்பப்பட்டார்கள். நடந்துள்ளது. 1993 நிலைமை வேறு.. இன்றைய நிலைமை வேறு..

தனி அதிகாரம் கிடையாது
வாரிசு அரசியல் என்பது பொறுப்பிலே வாரிசை திணிப்பது, ஆனால் அவர் (துரை வைகோ) தொண்டர்கள் விருப்பப்படி நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. தலைமை கழகத்தில் உள்ள மற்றவர்களுக்கு உள்ள அதிகாரம் தான் அவருக்கும் இருக்கும். மற்றபடி அவருக்கு என்று தனியான அதிகாரம் எதுவும் கிடையாது. பொதுச்செயலாளர் பதவி எல்லாம் பொதுக்குழு தான் முடிவு செய்யும். பொதுக்குழு எப்போது நடைபெறும் என்று பொங்கலுக்கு பிறகு அறிவிக்கப்படும். திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி தொடரும். ஊரக உள்ளாட்சி தேர்தல் போல் நகராட்சி தேர்தலிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

ஓய்வு கிடையாது
துரை வைகோ கட்சி பணி ஆற்றுவதை இரண்டுஆண்டுகளாக தடுத்து வைத்தேன். எனக்கு விருப்பம் இல்லாததால் தடுத்து வைத்தேன். ஆனால் தொண்டர்கள் அவரை பற்றிக்கொண்டார்கள். இன்றைய சூழ்நிலை தானாக உருவாகிவிட்டது. நான் எதிர்பார்த்தைவிட தொண்டர்களை வசீகரிக்கக்கூடிய திறமை துரை வைகோவிற்கு இருக்கிறது. மனிதாபிமானம் இருக்கிறது. பொதுவாழ்வில் வெற்றி பெற தேவையான அனைத்து குணமும் அவருக்கு இருக்கிறது. எனவே துரை வைகோ வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு மரணம் வரை ஓய்வு கிடையாது" இவ்வாறு வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications