பாஜகவா இப்படி?.. நம்பவே முடியலயே.. "அவங்களை" ஈஸியா ஓட விட்டிருக்கலாமே.. "இவரை" எப்டி மிஸ் பண்ணுச்சு?
பாஜக நடிகர் கார்த்திக்கை தன் பக்கம் இழுக்க தவறிவிட்டதோ என தோன்றுகிறது
சென்னை: போகிற வருகிற பிரபலங்களையெல்லாம் இழுத்து பிடித்து கட்சியில் சேர்த்து வரும் இயக்கம் பாஜக.. ஆனால் நடிகர் கார்த்திக்கை மட்டும் அது கண்டு கொள்ளாமல் விட்டது ஏன் என்ற ஆச்சரிய கேள்வி எழுகிறது.
நடிகர் கார்த்திக் ஒரு காலத்தில் அரசியல் கட்சிகளை பயமுறுத்திய சக்தி என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. ஆனால் உண்மைதான்.. என்ன கொடுமை என்றால் அந்த சக்தியை சாட்சாத் கார்த்திக்கே சரியாக உணரவில்லை.
சரணாலயம் என்ற அமைப்பை ஆரம்பத்தில் நடத்தி வந்த கார்த்திக், தென் மாவட்டங்களில் சில கூட்டங்களை நடத்தினார். அதற்குக் கூடிய கூட்டம் அப்போதைய முதல்வர் கருணாநிதியையே யோசிக்க வைத்தது. கார்த்திக்குக்கு இப்படி ஒரு கூட்டமா என்ற அதிர்ச்சியும் எழுந்தது.
பார்வர்ட் பிளாக்
முக்குலத்தோர் மத்தியில் புதிதாய் முளைத்திட்ட சூரியன் போல தகதகவென ஜொலிக்க ஆரம்பித்தார் கார்த்திக். பார்வர்ட் பிளாக் கட்சியே அவரைப் பார்த்து மிரண்டது. அதுவரை முக்குலத்தோர் சமூகத்தினரின் பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக் கொண்ட பலரும் கார்த்திக்கின் வருகையால் அதிர்ந்தனர்.
தென்மாவட்டம்
கிட்டத்தட்ட விஜயகாந்த்துக்கு எப்படி ஆரம்பத்தில் அரசியல் எழுச்சி கிடைத்ததோ அதுபோன்றதொரு வரவேற்பைத்தான் கார்த்திக் பெற்றார். கார்த்திக் தென் மாவட்டங்களுக்கு வருகிறார் என்றால் அவர் போகும் இடமெல்லாம் திருவிழாக்கோலம் பூண்டது. இளைஞர் படை அலை கடலென திரண்டு வந்தது. மிகப் பெரிய கூட்டம் சேர்த்தார் கார்த்திக். ஆனால் அந்த எழுச்சியை அவர் சரிவர பயன்படுத்த தவறினார். அங்குதான் அவர் பெரிதாக சறுக்கினார்.
அரசியல்வாதி
2006 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அவர் பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார். அது அவர் செய்த முதல் தவறு. தனிக் கட்சியாக அவர் தொடராமல் விட்டு விட்டார். தனக்குத் திரண்ட எழுச்சியை கொண்டு போய் பார்வர்ட் பிளாக் கட்சியிடம் ஒப்படைத்தார். அங்கேயாவது அதைத் தக்க வைத்தாரா என்றால் அங்கும் அவர் சறுக்கினார். ஒரு தீவிர அரசியல்வாதியாக தன்னை மாற்றிக் கொள்ளத் தவறினார். நுனி நாக்கு ஆங்கிலத்திலேயே தொடர்ந்தாரே தவிர தெற்கத்தி வீரனாக அவர் மாற முயலவில்லை.
போட்டி
பார்வர்ட் பிளாக்கில் ஏற்பட்ட பூசல் காரணமாக அங்கிருந்து நீக்கப்பட்டார் கார்த்திக். அதன் பின்னர் அகில இந்திய நாடாளுமன்ற மக்கள் கட்சியைத் தொடங்கினார் . அங்கும் சொதப்பல் தொடர்ந்தது. விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட அவர் வெறும் 15,000 வாக்குகளைப் பெற்றார். பிறகு தீவிர அரசியலை விட்டு விலகினார் கார்த்திக். ஆனாலும் தேர்தலுக்கு தேர்தல் அவரது பெயர் அடிபடும். அல்லது அவரே வந்து ஆஜராகி விட்டுச் செல்வார்.
லோக்சபா
2018ம் ஆண்டு மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற புதுக் கட்சியை தொடங்கினார். அதிமுக கூட்டணிக்கு லோக்சபா தேர்தலில்ஆதரவு கொடுத்தார். கார்த்திக்கின் செல்வாக்கை மட்டும் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினவே தவிர அவருக்கு சீட் கொடுக்க யாருக்குமே விருப்பம் இல்லை. காரணம் கார்த்திக்கிடம் நம்பகத்தன்மை இல்லாததே.. உருப்படியாக பிரச்சாரம் செய்ய மாட்டார். தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ளமாட்டார்.. இப்படி விளையாட்டுப் பிள்ளையாகவே அவரது அரசியல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
சமுதாயம்
அரசியலுக்கு வந்தும் கூட, 2 கட்சிகளை ஆரம்பித்தும் கூட அரசியல்வாதியாக மாறியும் கூட அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதே போலவே நடந்து வருகிறார் கார்த்திக்.. ஆரம்பத்தில் அவரைப் பார்த்துப் பயந்த அரசியல் கட்சிகள், அவருடைய உண்மையான பலத்தைப் பார்த்த பின்னர் அவரைக் கண்டு கொள்வதே இல்லை. அவர் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினர் மத்தியில் இன்னும் கூட அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது.. கார்த்திக் மட்டும்சற்று சீரியஸாக களம் இறங்கினால் மீண்டும் ராஜாவாக மாறலாம் என்பதே நிதர்சனம்.
பாஜக
சரி பாஜக மேட்டருக்கு வருவோம்.. சமீப காலமாக சமூகத்தில் யாரெல்லாம் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் குறி பார்த்து தூக்கி வந்தது பாஜக... நடிகர் செந்திலை கூட விடவில்லை... மனோ பாலாவையும் விடவில்லை... ராதாரவியையும் விடவில்லை. ஆனால் கார்த்திக்கை மட்டும் அவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. கார்த்திக்கையும் கட்சியில் சேர்த்து அவருக்கும் சீட் கொடுத்து களத்தில் நிறுத்தியிருந்தால் கட்சிக்கு ஒரு நட்சத்திர வேட்பாளர் கிடைத்ததுபோலவும் ஆகியிருக்கும்,
ஆச்சரியம்
ஒரு ஸ்டார் பிரச்சாரகர் கிடைத்தது போலவும் ஆகியிருக்கும்.. ஆனால் ஏன் பாஜக அதைச் செய்யவில்லை என்ற ஆச்சரியம் எழுகிறது. வழக்கமாக அரசியல்வாதிகளிடம்தான் மற்றவர்கள் ஏமாறுவார்கள் என்று சொல்வார்கள்.. ஆனால் சொந்தக் கட்சியினரிடமே ஏமாந்த ஒரே அரசியல்வாதி கார்த்திக்காகத்தான் இருக்க முடியும். அவ்வளவு நல்லவராக இருக்கும் கார்த்திக் நடிப்பில் ஜொலித்தது போல அரசியலில் மிளிர முடியாமல் போனது ஆச்சரியம்தான்.