ஓபிஎஸ்சை நீக்குவது பற்றி அதிமுக முடிவா?.. "அது பரம ரகசியம்".. பொடி வைத்து பேசிய ஜெயக்குமார்.. பரபர
சென்னை: அதிமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இல்லாமல் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் கூட்டத்தில் சில சீக்ரெட் விஷயங்கள் பேசப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Recommended Video
அதிமுகவில் தான் இழந்த ஆதரவை மீட்பதற்காக ஓபிஎஸ் தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். நேற்று இதற்காக தேனி சென்றவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கொத்தாக அள்ளப்போகும் அறிவாலயம்! ஓபிஎஸ் மட்டும் நீக்கப்பட்டால்! திமுகவிற்குதான் சாதகம்! ஏன் தெரியுமா?
ஓ.பன்னீர் செல்வம் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடைபெறும் என்று திடீரென நேற்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அழைப்பு சொன்னது என்ன?
எடப்பாடி பதவி வகிக்கும் கழக தலைமை நிர்வாக செயலாளர் பெயரில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 27.6.2022 - திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன், என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
பதிலடி
இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி நாளை அதிமுக அலுவலகத்தில் நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஓபிஎஸ் தரப்பு பதில் அறிக்கை வெளியிட்டது. அவர் வெளியிட்ட அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட, திட்ட விதி 20A(v)-ன்கீழ் கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது.
என்ன சொன்னார்?
அதன்படி, இருவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் எந்தவிதமான கூட்டமும் கூட்டப்பட வேண்டும். ஆனால், இருவருடைய ஒப்புதலுமின்றி, கையொப்பம் இல்லாமல், 'கழக தலைமை நிலையச் செயலாளர், தலைமைக் கழகம்' என்ற பெயரில் கழக சட்ட, திட்ட விதிக்கு எதிராக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. எனவே இந்த கூட்டம் செல்லாது. இதில் எடுக்கப்படும் முடிவுகளும் செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நீக்கம்
இந்த நிலையில்தான் ஓபிஎஸ் எதிர்ப்பை மீறி இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்குவது, பொருளாளர் பதவிக்கு புதிய நிர்வாகியை நியமிப்பது, தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடியை நியமனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் என்ன பேசப்பட்டன என்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
கூட்டத்திற்கு பின்
இந்த நிலையில் கூட்டத்தில் சில சீக்ரெட் விஷயங்கள் பேசப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதில், பண்ருட்டி ராமசந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், முத்து சந்திரன், ஜஸ்டிஸ் செல்வராஜ் ஆகியோர் இன்று தலைமைக் கழக கூட்டத்திற்கு வரவில்லை. இவர்களுக்கு உடல்நிலை சரியில்லை. பொதுக்குழுவை ஜூலை 11ம் தேதி கூட்டுவது, அதற்கு கடிதம் அனுப்புவது தொடர்பாக இன்று ஆலோசனை செய்யப்பட்டது.
முடிவு
பல்வேறு பொருட்கள் பற்றி விவாதிக்கப்பட்டு, முடிவும் எடுக்கப்பட்டது. சில விஷயங்கள் பரம ரகசியம். எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்கிறேன். எதை சொல்ல கூடாதோ அதை சொல் மாட்டேன். எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். இன்று எடுக்கப்பட்ட பல முடிவுகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. அவர் அறிவிப்புகளாக வருமா வராத என்பதை பற்றி கட்சிதான் முடிவு செய்யும், என்று ஜெயக்குமார் பொடி வைத்து பேசி இருக்கிறார்.