சிஎஸ்கே இஸ் "பேக்.." பேட்டிங்கில் புஃல் பார்ம்.. பட்டையை கிளப்ப தோனி படை ரெடி! ஜஸ்ட் "இதுலதான்" வீக்
சென்னை: வந்தாச்சு ஐபிஎல் திருவிழா. 2020ஆம் ஆண்டு பலருக்கும் கசப்பான அனுபவங்களைத்தான் கொடுத்துள்ளது.. சிஎஸ்கே ரசிகர்களும் அதில் விதிவிலக்கு கிடையாது.
2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதுவரை, எப்போதுமே எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும்தான் . கன்சிஸ்டன்ட் அணி என்று சொல்வார்கள்.
இதற்கு மிக முக்கிய காரணம் கேப்டன் தல தோனி என்பதை எதிர் அணியினரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் அப்பேர்ப்பட்ட டீம் போன வருடம், ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் மறக்கமுடியாத மோசமான ஆட்டத்தை அதன் ரசிகர்களுக்கு பரிசாக அளித்தது.
படு மோசம்
மும்பை அல்லது டெல்லி நம்மை விட புள்ளி பட்டியலில் மேலே இருந்தால் பரவாயில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கூட சிஎஸ்கே அணியை விட டாப்புக்கு சென்றதை இத்தனை மாதங்களாகியும் சிஎஸ்கே ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
தோனி பார்ம்
தோனி கேரியர் கிராப் ஏறுமுகத்தில் இருந்த போது அவர் தொட்டதெல்லாம் துலங்கியது . அனைத்து ஐசிசி கோப்பைகளையும் இந்தியாவுக்கு வசமாக்கினார். பேட்டிங்கிலும் பழம் மாதிரி பந்துகள் சிக்சருக்கு சென்று விழுந்தன. ஆனால், கடந்த மூன்று வருடங்களாக தோனி பேட்டிங் பார்ம் மிக மோசமான நிலைக்குப் போய்விட்டது.
சச்சின், ஜெயசூர்யா அசத்தல்
சமீபத்தில் ரோடு சேப்டி சீரீஸ் தொடருக்காக இந்திய லெஜெண்ட் , இலங்கை லெஜண்ட், மேற்கு இந்திய தீவுகள் லெஜண்ட் என, பல நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற ஆட்டம் நடைபெற்றது. இந்திய லெஜண்ட் அணியின், சச்சின் டெண்டுல்கர், மே.இ.தீவுகளின், பிரைன் லாரா, இலங்கையின் சனத் ஜெயசூரியா உள்ளிட்ட லெஜெண்ட் வீரர்கள் பலரின் பேட்டிங் திறமை எந்த மாற்றமும் இல்லாமல் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அப்படியே இருந்ததை கவனிக்க முடிந்தது. பேட்டிங் ஸ்டைலிலும் எந்த மாற்றமும் இல்லை.
வயது மேட்டரே இல்லை
இத்தனைக்கும் அவர்கள் ஐபிஎல் உள்ளிட்ட எந்த ஒரு போட்டித் தொடரிலும் சமீபகாலமாக விளையாடவில்லை. எனவே வயது முதிர்வு என்ற ஒரு காரணத்தை மட்டுமே வைத்து தோனி சரியாக பேட்டிங் செய்யாததற்கு நாம் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. உரிய பயிற்சி மற்றும் உத்வேகம் அவசியம். இந்த ஐபிஎல் தொடரில் தோனியிடம் அதை எதிர் பார்க்கலாம் என்று அடித்துச் சொல்கிறார்கள் ரசிகர்கள்.
சுரேஷ் ரெய்னா
கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே படுமோசமாக சொதப்ப இன்னொரு காரணம் லோவர் மிடில் ஆர்டர் ரொம்ப வீக்காக போய்விட்டது. சுரேஷ் ரெய்னா தொடரில் பங்கேற்காதது சிஎஸ்கே அணியின் முதுகெலும்பை உடைத்து விட்டது என்று சொல்லலாம். லோவர் ஆர்டரில் தோனி சோபிக்கவில்லை, மிடில் ஆர்டரில் சுரேஷ்ரெய்னா இல்லை. டாப் ஆர்டரில் டுப்லஸ்ஸிஸ், ஷேன் வாட்சன், அப்பத்தி ராயடு ஆகிய மூன்று பேரில் யாராவது ஒருவர் கிளிக் ஆனால்தான் உண்டு என்ற நிலைமையில் இருந்தது சிஎஸ்கே.
பலே பேட்டிங் லைன்
நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த கவலை தோனிக்கு இல்லை. சின்ன தல சுரேஷ் ரெய்னா அணிக்கு திரும்பிவிட்டார். மொயின் அலி அருமையான ஒரு ஆல்ரவுண்டர். 7 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது சிஎஸ்கே. அவர் ஸ்பின் பந்துகளை வீசுவதோடு மிகச்சிறந்த ஹிட்டர். கடைசி கட்டங்களில் பந்துகளை அனாயாசமாக சிக்சர்கள் விளாசக்கூடிய திறமை மிக்கவர். சுரேஷ் ரெய்னா, தோனி, மொயின் அலி, சாம் கர்ரன் ஆகியோர் லோவர் ஆர்டரில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக மாறப் போகிறார்கள் என்பது சிஎஸ்கே வீரர்களின் மிகப்பெரிய நம்பிக்கை.
அடுத்த மெக்ராத் ஹசில்வுட்
எப்போதுமே பந்துவீச்சில் பெரிதாக சாதித்தது கிடையாது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த முறை ரொம்பவே ஆசைப்பட்டு ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹசில்வுட்டை வாங்கியது. ஆஸ்திரேலியாவின் அடுத்த மெக்ராத் என்று புகழப்பட்டவர் அவர். எனவே ரன்களை கட்டுப்படுத்துவதில் அவர் மிகுந்த பங்களிப்பார் என்று, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக விளையாட வரவில்லை என்று சொல்லிவிட்டார்.
ஷர்துல் தாகூர் இருக்காரே
மீண்டும் பந்துவீச்சு பலவீனமாக மாறிவிட்டது. இருப்பினும் இந்த விஷயம் அந்த அணிக்கு புதிது கிடையாது. சமாளித்து விடுவார்கள். பேட்டிங் சொதப்பல் தான் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பை தந்தது. இந்த முறை அது இருக்காது என்பது மிகப்பெரிய நம்பிக்கை . ஷர்துல் தாகூர் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். எப்போது விக்கெட் தேவையோ அப்போது விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார். அவர் சிஎஸ்கே அணிக்கு ஒரு பலமாக இருப்பார்.
சிஎஸ்கே மீது எதிர்பார்ப்பு
இந்த முறை சிஎஸ்கே கோப்பையை அடிக்குமா என்பதை இப்போதே சொல்லிவிட முடியாதுதான். ஆனால், போன வருடம் போல மோசமான ஆட்டத்தை சிஎஸ்கே வீரர்களே நினைத்தால் கூட வெளிப்படுத்த முடியாது என்பதை மட்டும் ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்லலாம்.