என்னாச்சு திடீர்னு.. "எடப்பாடியார் இதை மட்டும் செய்யட்டுமே.. என் ஆதரவு அவருக்குதான்" தினகரன் அதிரடி
அதிமுகவை ஆதரிக்க முன்வருகிறார் டிடிவி தினகரன்
சென்னை: "எடப்பாடி அரசு மட்டும் இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரட்டும்.. அதற்கு நான் கண்டிப்பாக ஆதரவு தருவேன்" என்று ஆணித்தரமாக சொல்கிறார் டிடிவி தினகரன்.. சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும்.. இதை மட்டும் செய்யட்டுமே" என்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!
சிஏஏ, தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என நாடெங்கும் போராட்டம் வலுத்து வருகிறது. இதேநிலைதான் தமிழகத்திலும்.. இன்னொரு பக்கம் இந்த சட்டங்களுக்கு ஆதரவாக பாஜக களமிறங்கி பிரச்சாரம் செய்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மாநில அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளில் எத்தனையோ பேர் இதே கருத்தை வலியுறுத்தினாலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது.. தினகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது,
பேட்டி
"அதிமுக அரசு சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அவர்களை நான் ஆதரிப்பேன்.. முதலில் எடப்பாடி அரசு சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரட்டும்.. கொண்டு வந்தால் ஆதரவாக வாக்களிப்பேன்.. ஆனால் கொண்டுவருவார்களா என தெரியாது.. இது வந்த பிறகு பார்ப்போம்.. ஆனால் தீர்மானம் நிறைவேற்றினால் ஆதரவு உண்டு" என்றார்.
மூத்த தலைவர்கள்
இது சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்துக்கு மட்டுமான ஆதரவாக கருத தோன்றவில்லை.. இந்த 3 வருடங்களாக அதிமுக தலைமையும் - அமமுக தலைமையும் எதிரும் புதிருமாக இருந்தனர்.. இவ்விரு கட்சிகளையும் ஒன்றிணைக்க ஆரம்பத்திலேயே சில மூத்த தலைகள் முயற்சி செய்தனர்.. ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரும், முதல்வர் எடப்படியாரும் அதிகமாகவே பிடிவாதம் காட்டினர். "அந்த கட்சியிலிருந்து யார் வேண்டுமானாலும் இங்கு வரட்டும்.. ஆனால் அவர் ஒருத்தரை தவிர" என்று கறார் காட்டினார்கள்.
அமைச்சர்கள்
செல்லூர்ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களுக்கோ எதுவும் கருத்து சொல்ல முடியாமல் மென்று விழுங்கினார்கள்.. "சசிகலா விடுதலை ஆக வேண்டும், அதற்காக நான் பிரார்த்திக்கிறேன்" என்று பகிரங்கமாக சொல்ல தோன்றினாலும், டிடிவி தினகரன் என்று வரும்போது மட்டும் கமுக்கமாக இருந்து கொள்வார்கள், அல்லது கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதுதான் முடிவு என்று மேலே கையை காட்டி விடுவார்கள்.
சறுக்கல்கள்
இதேதான் டிடிவி தினகரனும்.. எத்தனை பேர் அவர் முதுகில் குத்தினாலும், கட்சி தாவல்களில் ஈடுபட்டாலும், கோர்ட், கேஸ், சின்னம் உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கினாலும் அசராமல் இன்றும் அதே கெத்துடன் நிற்கிறார். பல தோல்விகள், சறுக்கல்கள் வந்தாலும் தாய்க்கழகத்துடன் இணைந்து கட்சியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்ததே இல்லை.. காம்பரமைஸ் செய்து கொள்ளாமலேயே இருப்பதுகூட இந்த "கூல் தலைவரின்" ஒரு பிளஸ்தான்!
போட்டிகள்
ஆனால் 3 வருட நிலைமை போல இப்போது இல்லை.. அதிமுகவும் சரி, அமமுகவும் சரி, பலம்பொருந்தி வரும் திமுகவை எதிர்க்க வேண்டி உள்ளது.. அவர்களுக்கு டஃப் கொடுக்க வேண்டி உள்ளது.. முதல் இடத்தையே மீண்டும் கெட்டியாக பிடித்து கொள்ள அதிமுக முயன்று வருகிறது.. 2-வது இடத்திலிருந்து முதலிடத்தை பிடிக்க திமுக போராடி வருகிறது.. இதில் 3-வது இடத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகர அமமுக முயல்கிறது.. அதன் வெளிப்பாடுதான் டிடிவி தினகரனின் பேட்டியின் மூலம் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.
சசிகலா
சிஏஏவுக்கு ஆதரவு தருகிறேன் என்றுதான் தினகரன் சொன்னாலும், இவ்விரு கட்சிகளுமே மீண்டும் ஒன்றிணைந்தால், சட்டசபை தேர்தலில் திமுகவை சமாளிக்க முடியும்.. தினகரனின் செல்வாக்கு மேலும் கூடும்.. இதற்கு எப்படியும் சசிகலா மறுக்கவும் மாட்டார்.. ஏனெனில் கழகம்தான் முக்கியம் என்று ஜெயிலுக்கு போகும்போது சத்தியம் செய்துவிட்டு போனவர்.. அதனால் கழகம் இப்படி தனித்து இயங்கி கொண்டிருப்பதைகூட அநேகமாக அவர் விரும்ப மாட்டார் என்றே தெரிகிறது.
சோதனைகள்
அது மட்டுமல்லாமல், அதிமுகவை பாதுகாக்கவும், அதனை ஆட்சி பீடத்தில் அமர்த்தவும் எம்ஜிஆர், ஜெயலலிதா அர்ப்பணித்த உழைப்பும் தியாகமும் அளப்பரியது... எத்தனையோ சோதனைகளையும், அடக்குமுறைகளையும், அவதூறுகளையும், பழிகளையும் தாண்டி கட்சியையும் ஆட்சியையும் பாதுகாத்த வந்த அதிமுக வகுத்த பாதை, இப்போது மாறிவிடக்கூடாதே என்பதே அடிமட்ட தொண்டனின் உள்ளக் குமுறலாகவும், அதிமுகவினரையும் தாண்டி ஒவ்வொரு குடிமகனின் வேட்கையாகவும் உள்ளது.
ரத்தத்தின் ரத்தங்கள்
அந்த வகையில் அதிமுக-அமமுக இணைந்தால் முதலில் சந்தோஷப்படுவது தொண்டர்களாகத்தான் இருக்க முடியும்.. அதை விட முக்கியமானது.. இந்த தேர்தலை விட்டால் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேறு வாய்ப்பே கிடையாது. எனவே அனைத்து தரப்பினரும் ஈகோ, மோதல், பூசல் ஆகியவற்றை தூக்கி போட்டு விட்டு... ஒரே இலையின் கீழ் அணி திரண்டால் அதை விட பெரிய ஹேப்பி நியூஸ், ரத்தத்தின் ரத்தங்களுக்கு இருக்கவே முடியாது!!