"நிலைமை கைமீறி போகிறது".. நேராக காரை அங்கேயே விடப்போகும் ஓபிஎஸ்.. கடைசி அஸ்திரம்.. அதிரும் அதிமுக!
சென்னை: அதிமுகவில் நிலைமை தனக்கு சாதமாக செல்லவில்லை என்றால் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் விரைவில் முக்கியமான புள்ளி ஒருவரை சந்திக்க முயற்சி செய்வார் என்று கூறப்படுகிறது.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயன்று வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதை பற்றி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
அதிமுக நிர்வாகிகள் பலர் ஒற்றை தலைமை வேண்டும் என்று நேற்று நடந்த கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கியமாக முன்னாள் அமைச்சர்கள் பலர் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.
இது உங்களுக்கு தேவையில்லாத வேலை! வைத்திலிங்கத்தை ரவுண்டு கட்டிய அதிமுக மாவட்டச் செயலாளர்!
எடப்பாடி
பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. தற்போது இரட்டை தலைமை இருக்கிறது. இரண்டு தலைகளும் ஒவ்வொரு பக்கம் செல்கிறார்கள். இவர்கள் தனி தனியாக முடிவு எடுக்கிறார்கள். இதனால் நிர்வாகிகள் இடையே குழப்பம் உள்ளது. கட்சியின் வலிமையையும் இதனால் குறைந்து கொண்டே வருகிறது. இனி தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் அது ஒற்றை தலைமையின் கீழ்தான் இருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
ஒற்றை தலைமை
அதோடு அந்த ஒற்றை தலைமை எடப்பாடியாகத்தான் இருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கின்றன. இந்த நிலையில் கூட்டத்திற்கு பின்பாக இன்று எடப்பாடி பழனிச்சாமி எஸ்பி வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அதிமுகவில் தன்னை பொதுச்செயலாளராக அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில பேசி இருக்கிறார் என்கிறார்கள்.
பொதுக்குழு
பொதுக்குழுவில் இதற்கான தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என்று எடப்பாடி கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ்ஸிடம் இதை பற்றி ஆர்பி உதயகுமார், காமராஜ் ஆகியோர் பேசியதாக தெரிகிறது. அவரை நேரில் சந்தித்து எடப்பாடி சார்பாக சமாதான பேச்சுவார்த்தைகளை இவர்கள் மேற்கொண்டு உள்ளனர். காலையில் இருந்து 3 முறைக்கு மேல் இந்த பேச்சுவார்த்தைகள் நடந்தும் சமாதானம் எட்டப்படவில்லை.
பிரச்சனை
பொதுவாக அதிமுகவில் இது போன்ற பிரச்சனைகள் நிலவும் சமயத்தில் அதை சரி செய்ய டெல்லி பாஜக உள்ளே வரும். ஓபிஎஸ் சில முறை டெல்லியை தனது பிரச்சனைக்காக அணுகி இருக்கிறார். கடந்த முறை ஓபிஎஸ்- இபிஎஸ் பிரச்சனை இருந்த போதெல்லாம் டெல்லி பாஜக தலையிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் இப்போது பாஜகவை பலப்படுத்துவதில் டெல்லி தலைமை தீவிரம் காட்டுகிறது. அதிமுகவை இனியும் அக்கட்சி சரிசெய்ய நினைக்காது என்கிறார்கள். இதனால் ஓபிஎஸ் சார்பில் டெல்லியில் அணுகினால் பலன் இருக்காது என்கிறார்கள்.
கைமீறி செல்லும் நிலைமை
இதனால் நிலைமை கைமீறி செல்லும் பட்சத்தில் ஓபிஎஸ் நேரடியாக காரை எடுத்துக்கொண்டு, சசிகலாவை பார்க்க செல்வார் என்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் இந்த சந்திப்பு நடக்கலாம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஓபிஎஸ்ஸுக்கு மிகவும் நெருக்கமான தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் நேற்று சசிகலாவிற்கு ஆதரவாக பேசினார். அதில், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும்.
சசிகலா
டிடிவி தினகரனையும் அதிமுகவில் சேர்க்க வேண்டும். இவர்கள் இருவரையும் அதிமுகவில் மீண்டும் சேர்த்தாலே கட்சியில் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும் என்று கூறினார். அப்போது சசிகலாவை ஆதரித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவு இல்லாமல், சசிகலாவிற்கு ஆதரவாக அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்காது. இந்த நிலையில்தான் கட்சியில் தனக்கு எதிராக நிலைமை கைமீறி சென்றால் சசிகலாவை தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!