சர்வதேச யானைகள் தினம்: வனங்களின் பாதுகாவலன் யானைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்
தமிழகத்தில் 4 புலிகள் காப்பகங்கள் ஒன்பது வனக்கோட்டங்கள், 4 வன உயிரின சரணாலயங்களில் யானைகள் பரவலாக வாழ்கின்றன. கோவை, சத்தியமங்கலம், நீலகிரி,கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் உள்ள வனப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் யானைகள் உயி
சென்னை: "யானை யானை அழகர் யானை...அழகரும் சொக்கரும் ஏறும் யானை... கட்டிக்கரும்பை சுவைக்கும் யானை" என்று யானை குறித்த பாடலை கம்பீரமாக பாடி ஆசிரியை நடித்துக்காட்டும் போதே யானை மீதான ஆர்வம் குழந்தைகளுக்குத் தொற்றிக்கொள்ளும். கம்பீரமாகவும் குழந்தைத்தனமாகவும் காட்சியளிக்கும் யானையை பார்க்கவும் ஆசி வாங்க அனைவருமே விரும்புவார்கள். கோவில்களில் யானையிடம் ஆசி வாங்குவதற்கும் யானை மீது சவாரி செய்வதற்கும் ஒருவித அச்சத்துடனேயே அருகில் செல்வார்கள் குழந்தைகள். சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் யானையின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
உயிரினங்களிலேயே யானை மற்றும் டால்பினுக்கு மட்டும் தான், மனிதர்களைப் போல மூளைப்பகுதியில் உணர்ச்சிப் பகுதி அமைந்துள்ளது. இதனால், கோபம், பாசம், கண்ணீர் என பல விஷயங்களில் யானைகள், மனிதரை ஒத்திருக்கும். முனகல்கள், பிளிறுதல்கள் மற்றும் மனிதனால் கேட்கமுடியாத பலவித ஓசைகள் மூலம் தங்களுக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறது யானை. தண்ணீரில் நீண்டதூரம் நீச்சல் அடிக்கவும், தனது தும்பிக்கையால் எவ்வித வாசனையை நுகர்ந்து உணரவும் யானையால் முடியும்.
யானைகள் புத்திசாலித்தனமும் நினைவாற்றலும் கொண்டவை. புயல் வருவதைக்கூட முன்கூட்டியே உணரும் தன்மையை யானை பெற்றிருக்கிறது. இன்று நிலத்தில் வாழும் உயிரினங்களில் ஆகப்பெரியது யானைதான். நான்கு முழங்கால்களை கொண்ட ஒரே உயிரினமும் அதுவே. யானையின் கால்கள், தூண் வடிவில் எந்த மாதிரியான இடத்திலும் நடக்கும் தன்மை கொண்டவை.

வனங்களின் பாதுகாவலன்
ஒரு யானை இருந்தால் ஒரு வனத்தையும் உருவாக்கலாம் என கூறுவார்கள். அதற்கு காரணம் யானையின் சாணமும், அவற்றின் அறிவுத்திறமையும் தான். நாடு முழுவதும் வனங்களில் உள்ள யானைகள் உணவு, தண்ணீர் தேடி தனக்கு சாதகமான இடத்திற்கு கூட்டம் கூட்டமாக இடம்பெயரும் தன்மை கொண்டவை. இதனை யானைகள் வலசு போதல் என்று சொல்வார்கள். தென் மேற்குப் பருவமழை, வட கிழக்குப் பருவமழைக் காலங்களில் இந்த இடப்பெயர்ச்சி இருக்கும்.

யானை சாப்பிடும் உணவு
யானையைக் கட்டி தீனி போட முடியாது என்பார்கள் அந்த அளவிற்கு யானைகள் சாப்பிடுமாம். பொதுவாகவே யானைகள், தங்களுடைய எடையில் 5 சதவிகித அளவுக்கு உணவு உட்கொள்கின்றன. தினசரியும் 200லிருந்து 250 கிலோ இலை, தழைகளையும், 150லிருந்து 200 லிட்டர் வரை தண்ணீரையும் உட்கொள்ளுமாம்.

யானையின் சாணம்
யானை சாணம் போடும் போது அதை ஓடிப்போய் பலரும் மிதிப்பார்கள். காரணம் அது நோய் நீக்கும் மருந்து என்று கிராமங்களில் பெரியவர்கள் கூறுவார்கள். ஒரு யானை நாள் முழுவதிலும் எடுத்துக் கொள்ளும் பலவிதமான பழங்கள் மற்றும் தாவரங்களின் இலைகளை மட்டுமே சாப்பிடுகிறது. யானையின் கழிவுப்பொருட்கள் பாரம்பரிய சிகிச்சை முறைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மருத்துவ குணங்கள் கொண்ட சாணம் நோய் நீக்கும் அருமருந்தாகவும் விளங்குகிறது.

மருத்துவ குணம்
சில யானைப் வறட்டிகளை பற்றவைத்து அவற்றை சுவாசித்தால் அது சைனஸ் போன்ற நோய்களில் இருந்தும் நம்மை காக்கிறது. யானையின் வரட்டி ஒரு சிறந்த கொசு விரட்டியாக செயல் படுகிறது. வறட்டி ஆக்கப் பட்ட யானை சாணியை, அது நன்கு காய்ந்ததும் ஒரு சிறு துண்டை எடுத்துக் அதை நெருப்பால் பற்ற வைத்து சிறிது நேரம் விட்டு வைத்தால் போதும். கொசுக்கள் இருக்கும் இடம் தெரியாமல் பறந்து போய் விடும். மேலும் ஒரு சிறப்பம்சம், இதை பற்ற வைத்து எரியும் போது இதில் இருந்து எந்த ஒரு நாற்றமும் வராது. இதனால் இவை மற்ற செயற்கை கொசு விரட்டிகள் போல நமது நாசிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.

வேட்டையாடப்படும் யானைகள்
இன்றைய நிலையில் காடுகளின் காவலனாக இருக்கும் யானைகள் பல விதமான அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன. முக்கியமாக, யானைகளின வழித்தடங்கள் துரித கதியில் அழிக்கப்படுகின்றன. காடுகளுக்கு இணைப்புப் பாலமாக உள்ள இந்த வலசைப்பாதைகள் அழிக்கப்படுவதன் காரணமாக யானைகள் குறுகிய காடுகளுக்குள் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. வலசைப் பாதைகளைத் துண்டிப்பதே, யானைகள், ஊருக்குள் படையெடுக்க முக்கியக்காரணமாக விளங்குகிறது.

யானைகள் கணக்கெடுப்பு
கடந்த 2017ஆம் ஆண்டில் தேசிய அளவில் நடந்த யானைகள் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 27 ஆயிரத்து 212 யானைகள் இருந்தன. அவற்றில் 10% யானைகள் , அதாவது 2, 761 யானைகள் தமிழகத்தில் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்தது. தமிழகத்தில் 4 புலிகள் காப்பகங்கள் ஒன்பது வனக்கோட்டங்கள், 4 வன உயிரின சரணாலயங்களில் யானைகள் பரவலாக வாழ்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 4,800க்கும் அதிகமாக யானைகள் வாழ்கின்றன.

யானையின் மரணங்கள்
யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துக்கள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொல்லப்படும் யானைகளில், 59 சதவிகிதம் வேட்டையாடப்பட்டவை. விஷ உணவால் 13 சதவிகிதமும், நோயினால்10 சதவிகிதமும், மின்சாரம் தாக்கி 8 சதவிகிதமும், ரயிலில் அடிபட்டு 5 சதவிகிதமும், பிற காரணங்களால் 5 சதவீதமும் யானைகள் மரணிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
10 ஆண்டுகளில் மரணம்
கோவை, சத்தியமங்கலம், நீலகிரி,கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் உள்ள வனப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் யானைகள் உயிரிழப்பு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 13 யானைகள் இறந்து உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாண்டுகளில் யானைகளின் மரணம்
தமிழ்நாட்டில் கடந்த 2017 முதல் 2019 வரை மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக 317 யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழந்து உள்ளது உள்ளதாகவும் அதிகபட்சமாக அசாமில் 62 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில் தெரியவந்துள்ளது.

யானைகளைப் பாதுகாப்பது எப்படி
யானைகள் விஞ்ஞானிகளால் சூழல் அமைப்பு பொறியியலாளர் என அன்புடன் அழைக்கப்படுகின்றன. யானைகள் முற்றிலுமாக அழிக்கப்படும் பட்சத்தில், வனங்களும், அதிலுள்ள வன உயிரினங்களும் படிப்படியாக அழியும் என்பதே நிதர்சனம். பல்வேறு சிறப்பு கொண்ட யானைகளை அதன் பாணியிலேயே வாழ விடுவது தான் வனங்களுக்கும், மனித உயிர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று யானை பாதுகாவலர்களும் வன உயிரின ஆர்வலர்களும் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications