“காழ்ப்புணர்ச்சி”..செம்மொழி நிறுவன சாதனை இது! ராமதாஸுக்கு லிஸ்ட் போட்டு எழுத்தாளர் பொ.வேல்சாமி பதில்
சென்னை: செம்மொழி நிறுவனம் பற்றிய அவதூறும் காழ்ப்பும் நிறைந்த ஒரு குறிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு இருப்பதாக பிரபல எழுத்தாளர் பொ.வேல்சாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள முகநூல் பதிவில், "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், செம்மொழி நிறுவனம் பற்றிய அவதூறும் காழ்ப்பும் நிறைந்த ஒரு குறிப்பை கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆனால் இப்பொழுது செம்மொழி நிறுவனத்தில் பொறுப்பிலுள்ள இயக்குநர் வருவதற்கு முன்னால் எந்த வகையான ஆக்கபூர்வமான செயல்பாடுகள் நடந்திருந்தன என்பதை டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
போனா வராது.. பொழுது போனா கிடைக்காது.. மொத்தமாக விற்பனைக்கே வரும்
அர்த்தமற்ற பதிவு
அப்படி எந்தவொரு நியாயமான பதிவையும் தராமல் ஒரு கடுமையான அவதூறை இன்று பொறுப்பிலுள்ள செம்மொழி நிறுவன இயக்குநர் மீது சாற்றுவது நியாயம் தானா? டாக்டர் ராமதாசின் இத்தகைய அவதூறு அர்த்தமற்றது என்பதை செம்மொழி நிறுவனத்திற்கு கடந்த இரண்டாண்டுக்கு முன்னர் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நடந்திருக்கும் பல செயல்கள் நிரூபிக்கின்றன.
மொழிபெயர்ப்புகள்
குறிப்பாகத் தமிழ்மொழியின் சிறப்பை இந்தியா முழுமையும் மட்டுமல்ல உலக முழுமையும் கொண்டு செல்வதற்கான அற்புதமான பல மொழிபெயர்ப்புகளைத் தமிழ்மொழியில் இருந்து உலக மொழிகளில் மொழிபெயர்த்துள்ளதையும் அத்தகைய மொழிபெயர்ப்பு நூல்களை உலக முழுமையும் இருந்து பல பல்கலைக் கழகங்களும் அறிஞர்களும் வாங்கி படித்துக் கொண்டிருக்கும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டுள்ளது. இத்தகைய செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்டிகொண்டிருப்பவர் டாக்டர் சந்திரசேகரன் என்பது தமிழுலகம் வரவேற்றுக் கொண்டுள்ளது.
கன்னட மொழிபெயர்ப்பு
இதுஒருபுறம் இருக்கட்டும், எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் உள்ள புறுநானூறு, அகநானூறு, கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், நற்றிணை, குறுந்தொகை, பத்துப்பாட்டு போன்ற நூல்கள் அதற்கான உரைகளுடனும் அரிய செய்திகளுக்கான ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் பிறமொழி மாணவர்கள் தமிழ்மொழியின் பண்பாட்டு வரலாற்றை அறிந்து புரிந்துக் கொள்வதற்கான ஆராய்ச்சி உரைகளுடனும் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு உயர்ந்த தரமான தாளில் தமிழ்மொழியிலிருந்து 8000 பக்கங்களில் கன்னடமொழியில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் பாடம்
இந்த நூல்களை கர்நாடக அரசு அந்த மாநிலத்தில் கன்னட மொழியில் M.A. M.Phil., போன்ற முதுகலை பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைத்து பயிற்றுவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடமொழியில் வெளிவந்துள்ள நம்முடைய சங்கஇலக்கியங்கள் அனைத்தின் முன்பக்க படங்களையும் உங்கள் பார்வைக்காக இங்கு பதிவிட்டுள்ளேன்.
இந்திய மொழிகளில் திருக்குறள்
செம்மொழி நிறுவனம் இப்பொழுது செய்து வருகின்ற பணிகளையும் நூல் வெளியீடுகள் பற்றியும் முகநூல் பதிவில் சொல்லிவிட முடியாது. அதற்கு தனியாக ஒரு கட்டுரையே எழுத வேண்டும். குறிப்பாக திருக்குறளை அதற்கான விளக்கத்துடனும் விரிவான ஆராய்ச்சிக் குறிப்புக்களுடனும் இந்தி, சமஸ்கிருதம், மணிப்புரி, கன்னடம், பஞ்சாபி, தெலுங்கு மலையாளம், மராத்தி, ஒடியா, படகு, வாக்ரிபோலி, செளராஷ்டிரா, உருது போன்ற பெரும்பாலான இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
பன்னாட்டு மொழி பெயர்ப்பு
ஈரான்(பாரசீகம்), அரபுநாடுகள் (அரேபிய மொழி), கம்போடியா, நேபாளி இப்படி இன்னும் பல நாடுகளின் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துகொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிக அருமையான வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூல்கள் மிக குறைந்த விலையில் விற்பனையும் செய்யப்படுகிறது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும்.
மத்திய அரசு உதவி
இத்தகைய தமிழ் வளர்ச்சிக்கான செயல்பாடுகள் ஊக்கமுடன் நடைபெற்று வருவதற்கான பெருந்தொகைகளை (கோடிக்கணக்கான ரூபாய்கள்) இன்றைய மத்திய அரசு உடனுக்குடன் வழங்கி வருவதையும் இவ்விடத்தில் குறிப்பிடாமல் இருக்க முடியாது." என்று குறிப்பிட்டு உள்ளார்.