Margin Call பாத்திருக்கீங்களா?.. அப்படீன்னா யெஸ் பேங்க் கதையும் உங்களுக்கு ஈசியா புரியும்!
சென்னை: யெஸ் பேங்க் சீர்குலைவு இன்று நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த வங்கியின் கதையைப் பார்க்கும்போது நமக்கு Margin call என்ற படத்தின் கதை நினைவுக்கு வருகிறது. 2011ல் வெளியான அமெரிக்க படம் அது. இந்தப் படத்துக்கும், யெஸ் பேங்க் பஞ்சாயத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
Recommended Video
மார்ஜின் கால் படத்தின் கதை இதுதான்..!
அது ஒரு முதலீட்டு வங்கி.. பெரும் நிதி நெருக்கடி காலம் அது.. ஆள் குறைப்பு தலைவிரித்தாடுகிறது. அந்த வங்கியிலும் ஆள் குறைப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்படுகின்றன. எச். ஆர் நிர்வாகியின் அறைக்கு அழைக்கப்படுகிறார் ரிஸ்க் மேனேஜ்மென்ட் பிரிவின் முக்கிய ஊழியர் எரிக் டேல். உங்களை வேலையிலிருந்து நீக்குகிறோம் என்ற தகவல் அவரிடம் கூறப்படுகிறது. அதை ஆட்சேபிக்கிறார் டேல். எனக்கு நீங்கள் கொடுத்த வேலை இன்னும் பாக்கி இருக்கிறது. பாதி வேலையை முடித்து விட்டேன். மீதி வேலையை முடிக்க அவகாசம் கொடுங்க.. அதை முடித்த பிறகு நானே போய் விடுகிறேன் என்று வாதிடுகிறார் டேல். அதைப் பற்றிக் கவலைப்படாதீங்க. உங்க வேலையை இன்னொருவர் பார்த்துக் கொள்வார் நீங்க கிளம்புங்க என்று கண்டிப்பான பதிலே அவருக்குக் கிடைக்கிறது.
அதிருப்தியடையும் எரிக் டேல், தான் பணியாற்றி வரும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் பிரிவின் தலைவரான வில் எமர்சனை சந்தித்து இதே கோரிக்கையை வைக்கிறார். ஆனால் அதே பதிலே அவருக்கு மீண்டும் கிடைக்கிறது. வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்புகிறார் எரிக் டேல். போகும்போது தனக்குப் பின்னால் தனது பணியை தொடரப் போகும் பீட்டர் சல்லிவனை சந்திக்கிறார். அவரிடம் ஒரு பென் டிரைவைத் தருகிறார். இதில் நிறைய தகவல்கள் உள்ளன. கவனமாக ஆராய்ந்து பார் என்று கூறி விட்டு மெளனமாக இடத்தைக் காலி செய்கிறார்.
டேல் கூறிய பென் டிரைவை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்குள் வரும் சல்லிவன் தனது இருக்கையில் அமர்ந்து வேலையைப் பார்க்கிறார். பணி நேரம் முடிந்தும் கூட இரவிலும் பணி தொடர்கிறது. அப்போது டேல் கொடுத்த பென் டிரைவ் அவருக்கு நினைவுக்கு வருகிறது. அதை எடுத்துப் போட்டு என்னதான் டேல் வைத்துள்ளார் என்று ஆராய்கிறார். அந்த டேட்டாக்களைப் பார்க்கப் பார்க்க அவருக்கு முகம் கருக்கிறது. அச்சம் பீடிக்கிறது.. அப்படியே அதிர்ந்து போய் விடுகிறார்.. வங்கியின் அடமானக் கடன்களின் அளவு வரலாறு காணாத வகையில் இருப்பதையும், அந்தக் கடன்கள் வாராக் கடன்களாக மாறி நிற்பதையும், வங்கியின் பங்கு மதிப்பு மோசமாக இருப்பதையும், வங்கி திவாலாகும் நிலையில் உள்ளதையும் மிகத் தெளிவான தரவுகளுடன் எரிக் டேல் அந்த பென் டிரைவில் வைத்திருப்பதைப் பார்த்து அதிர்கிறார் சல்லிவன்.
உடனே தனது பிரிவு ஊழியரான சேத் பிரெக்மேன் மற்றும் பிரிவு தலைவர் சாம் ரோஜர்ஸை அழைக்கிறார். அவர்களும் விரைந்து வருகிறார்கள். டேட்டாக்களைப் பார்த்து அதிர்கின்றனர். ஆஹா.. ஆபீஸ் தப்பு பண்ணிருச்சே என்று பதறும் அவர்கள் எரிக் டேலை தொடர்பு கொள்ள முயல்கிறார்கள். ஆனால் அவரைப் பிடிக்க முடியவில்லை.
வேறு வழியில்லாமல் வங்கி நிர்வாகிகளுக்கு தகவல் சொல்கிறார்கள். நடு இரவில் வங்கி அலுவலகத்தில் அவசரக் கூட்டம் கூட்டப்படுகிறது. வங்கியின் தலைமை ரிஸ்க் மேனேஜ்மென்ட் அதிகாரி சாரா ராபர்ட்சன் (டெமி மூர்) உள்ளிட்டோர் தலைமையில் கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு வங்கியின் தலைமை செயலதிகாரி ஜான் டுல்ட் வந்தாக வேண்டும் என்று சிலர் அபிப்பிராயம் தெரிவிக்க அவரும் வந்து சேருகிறார். தீவிர ஆலோசனை நடக்கிறது. வங்கி எந்த மாதிரியான சிக்கலில் இருக்கிறது என்பதை சல்லிவன் விவரிக்கிறார்.
எல்லாவற்றையும் அமைதியாக கேட்கும் வங்கியின் முக்கிய தலைமை நிர்வாகியான கோஹென், பேசாமல் நம்மிடம் இருக்கும் அனைத்து சொத்துக்களையும், பங்குகளையும் விற்று விட்டு நாம் சேஃப் ஆகி விடுவோம். அதுதான் ஒரே வழி என்று சொல்ல அனைவரும் அதிர்கின்றனர். குறிப்பாக சல்லிவன் கோபமாகி விடுகிறார். நமது நலனை பற்றி இங்கு நான் பேசிக் கொண்டிருக்கவில்லை. முதலீட்டாளர்களின் பாதிப்பை சொல்கிறேன். நீங்க நாம தப்பிக்கும் வழி பற்றி பேசுகிறீர்களே என்று கோபமாக கேட்கிறார்.
அதிகாலை நேரம்.. எரிக் டேலை மீண்டும் தொடர்பு கொள்ள முயல்கிறார் அவரை வேலையை விட்டு அனுப்பிய வில் எமர்சன். அவரது வீட்டில் டேல் இருப்பதை அறிந்து அங்கு விரைகிறார். உடனடியாக அலுவலகத்திற்கு வருமாறும், சிக்கலிலிருந்து வங்கியைக் காக்க உதவுமாறும் கேட்கிறார். ஆனால் டேல் எல்லாக் கோரிக்கையையும் நிராகரிக்கிறார். இதற்கிடையே வங்கியின் இந்த மோசமான நிலைமை ஏற்கனவே கோஹென் உள்ளிட்டோருக்குத் தெரியும் என்ற தகவல் கிடைக்கிறது.
கோஹென் சொன்ன திட்டத்தை அனைவரும் ஏற்போம். வேறு வழியில்லை.. அப்போதுதான் நாம் தப்ப முடியும் என்று வலியுறுத்தப்படுகிறது. வேறு வழியில்லாமல் அனைவரும் ஏற்கின்றனர்.. எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்தவர்களும் கோஹென் முடிவுக்கு ஒத்துப் போகின்றனர். ஒரு வழியாக பொழுது விடிகிறது.. பங்குச் சந்தைகள் பணிகளைத் தொடங்குகின்றன. முன்கூட்டியே திட்டமிட்டபடி தங்களது பங்குகளை விற்க ஆரம்பிக்கின்றனர் நிர்வாகிகள். மாலைக்குள் அனைத்து பங்குகளையும் விற்று முடிக்கிறார்கள்.
மார்ஜின் கால் படத்தில் வரும் வங்கியின் சீர்குலைவும், எஸ் வங்கியின் சீர்குலைவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். சினிமாவில் வருவதைப் போலத்தான் எஸ் வங்கியின் நிர்வாகிகளும் இருந்துள்ளனர். வங்கியின் மோசமான நிலையை அறிந்து அவர்கள் வரைக்கும் பாதுகாப்புக்கு வழி தேடியுள்ளனர். பலரை முன்கூட்டியே தங்களது பணத்தை எடுக்க அனுமதித்துள்ளனர். என்ன வித்தியாசம்னா.. மார்ஜின் கால் படத்தில் ராவோடு ராவாக எஸ்கேப் ஆகும் திட்டத்தை அரங்கேற்றியிருப்பார்கள்.. எஸ் பேங்க்கில் பல மாதமாக திட்டமிட்டு போண்டி ஆக்கியுள்ளனர்.