நாங்கள் வாரிசுகள் தான்.. ஆனால், எதற்கு தெரியுமா? - லிஸ்ட் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நாங்கள் வாரிசுகள் தான் ஆனால் எதற்கு தெரியுமா? என பட்டியலிட்டுப் பேசியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
சென்னை : "ஆம், நாங்கள் வாரிசுகள் தான். நாங்கள் கோட்பாட்டுக்கும், கொள்கைக்கும் வாரிசுகள்" என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை வலுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்தவே துடிக்கிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில், மொழிப்போர் தியாகிகள் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தி திணிப்பு போராட்டங்களில் பங்கேற்று உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் நேற்று மாநிலம் முழுவதும் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
முடிஞ்சதும் பாருங்க.. என்ன நடக்குதுன்னு.. சாட்டையை சுழற்ற ரெடியான ஸ்டாலின்.. கோட்டையில் திக்திக்!
பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின்
திருவள்ளூரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழ் காக்கும் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்த பிறகுதான் தாய்த்தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழும் ஆங்கிலமும்தான் இங்கு பயிற்று மொழியாக இருக்கும், என்று பேரறிஞர் அண்ணா சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
தியாகம் வீண்போகவில்லை
மொழிப்போர் தியாகிகள் செய்த உயிர்த்தியாகம் வீண்போகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகச் இந்தச் சட்டத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்தார். பள்ளி முதல் உயர்கல்வி வரை தமிழில் படிக்கலாம் என்ற நிலை இங்கு இருக்கிறது. உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலத்திலும் திறன் பெறலாம் என்ற நிலை இருக்கிறது. இன்றைக்கு உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம் வர இந்த இருமொழிக் கொள்கைதான் காரணம். இதற்கு அடித்தளமான தியாகிகளை ஐம்பது ஆண்டுகள் கடந்த பிறகும் நாம் போற்றுகிறோம் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அவர்களது தியாகத்தை நாம் மதிக்க வேண்டும் என்பது முதல் காரணம்.
இந்தியைத் திணிப்பதுதான் நோக்கமா?
இன்றைக்கும் அந்த மொழியுணர்வை - இன உணர்வை - மான உணர்வை நாம் பெற்றாக வேண்டும் என்பது இரண்டாவது காரணம். இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசானது இந்திமொழியைத் திணிப்பதை தனது வழக்கமாகவே வைத்துள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கி கல்வி மூலமாகத் திணிப்பது வரை தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு - என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்கப் பார்க்கிறார்கள்.
இந்தியாவை இந்திமயமாக்க
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையானது குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இந்திக்கு ஆதரவாக இந்தியாவை இந்திமயமாக ஆக்க நினைப்பதாக இருந்தது. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை வலுப்படுத்தும் போர்வையில் இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்தவே துடிக்கிறார்கள். இதனைக் கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்தோம்.
அதிமுகவின் சாதனைகள்
கடந்த 22 மாதங்களாக, தமிழ் மொழியை காக்கும் வகையில், திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக செய்ய வேண்டியதை, ஒன்றரை ஆண்டுகளுக்குள் நாம் செய்துள்ளோம். ஊழல் செய்து தமிழ்நாட்டை அகல பாதாளத்துக்கு கொண்டு சென்றதுதான் அதிமுகவின் 10 ஆண்டு சாதனை. ஈரோட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் அதிமுகவுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள். பச்சை துண்டு போட்டுக் கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகத்தை செய்தது அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளின் நிர்வாகமும் தரைதட்டி நின்றது.
நாங்கள் வாரிசுகள் தான்
ஆம். நாங்கள் வாரிசுகள் தான். நாங்கள் கோட்பாட்டுக்கு வாரிசுகள். கொள்கைக்கு வாரிசுகள். கடந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே இந்தித் திணிப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அப்போது சட்டமன்றத்தில் உரையாற்றிய நான், "தமிழ்மொழி என்பது நமது உயிராய் - உணர்வாய் - விழியாய் - எதிர்காலமாய் இருக்கிறது. அத்தகைய தமிழ்மொழியை வளர்க்கவும், பிறமொழி ஆதிக்கத்தில் இருந்து காக்கவுமே திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. கழகம் தோன்றிய காலம்முதல் இன்றுவரை மொழிக்காப்பு இயக்கமாகவே இருந்து வருகிறது என்று குறிப்பிட்டேன்.
அவர்களும் விடவில்லை, நாமும் விடுவதாக இல்லை
1938-ஆம் ஆண்டுமுதல் இந்தி மொழித் திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்க சக்திகளும் விடுவதாக இல்லை. நாமும் விடுவதாக இல்லை. இதுவெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல, தமிழினத்தை - தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டமாக நாம் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். தொடரவே செய்வோம் என்று தமிழ்நாடு பேரவையின் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நான் உறுதி அளித்தேன்.
அந்த உறுதிமொழியில் என்றைக்கும் உறுதியாக இருப்பேன்; இருப்போம்! இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான நமது போராட்டம் எப்போதும் தொடரும்! தொடரும்! தமிழைக் காக்கும் நமது முயற்சிகள் எப்போதும் தொடரும்! தொடரும்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.