பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவுக்கு.. 15 நாட்கள் நீதிமன்ற காவல்.. போலீசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன
சென்னை: தற்போது தலைமறைவாக உள்ள பப்ஜி மதனின் யூ டியூப் சேனல் நிர்வாகியாக இருந்த அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரை வரும் வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பப்ஜி உள்ளிட்ட வீடியோ கேம்கள் குறித்து நுட்பங்களை யூடியூப் தளத்தில் விளக்கிப் பிரபலமானவர் பப்ஜி மதன். யூடியூபில் கேமை விளையாடும்போது நேரலையிலேயே, பப்ஜி மதன் பெண்களை மிகவும் ஆபாசமாக வசைபாடுவார்
கடந்த சில தினங்களுக்கு முன் மதன் மீது புளியந்தோப்பு சைபர் க்ரைம் பிரிவில் இருவர் புகார் அளித்திருந்தனர். இது குறித்து விசாரிக்க போலீஸ் நிலையத்திற்கு நேரில் வரும்படி மதனிடம் போலீசார் தெரிவித்தனர்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
இருப்பினும் காவல் நிலையத்திற்கு வராமல் தலைமறைவானார் பப்ஜி மதன். இதையடுத்து பப்ஜி மதன் குறித்த பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரத் தொடங்கின. பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுதல், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, டெலிகிராம் தளத்தில் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்வது பல புகார்கள் குவிந்தன.

பல பிரிவுகளில் வழக்குப்பதிவு
இதையடுத்து அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண்களை ஆபாசமாகச் சித்தரித்துப் பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மனைவிக்குத் தொடர்பு
இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் தந்தையிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 12 மணி நேரம் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் மதனின் யூட்யூப் சேனலின் நிர்வாகியாக அவரது மனைவி கிருத்திகாவே இருந்ததை சிபிசிஐடி கண்டுபிடித்தனர். பெண்கள் குறித்து ஆபாசமாகத் தொடர்ந்து பேசி வந்த பப்ஜி மதனின் யூடியூப் சேனலும் கிருத்திகாவின் மெயில் ஐடியை வைத்தே தொடங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற காவல்
இதையடுத்து போலீசார் மதனின் மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். போலீசார் அவரை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகள் கிருத்திகாவை வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டனர். விரைவில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications