Z பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசின் இந்த உத்தரவு நெருடலாகத்தான் உள்ளது.. வேறு வழியில்லை.. அண்ணாமலை!
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, "இது தனக்கு ஒரு நெருடலாக உள்ளது என்றும் பயணம் செய்வதற்கு முன்பாகவே சொல்ல வேண்டும். 48 மணி நேரத்திற்கு முன்னாடி தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் இது எல்லாம் கட்டுப்பாடுகளாக நான் பார்க்கிறேன். ஆனால் வேறு வழியில்லை" என்று தெரிவித்தார்.
இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், பிரபலமான தொழில் அதிபர்கள் என சமூகத்தில் உயர் அந்தஸ்து கொண்டவர்களுக்கு அவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மத்திய அரசு சார்பாக X,Y, Y+, Z, Z+, SPG போன்ற பாதுகாப்புகள் வழங்கப்படுகிறது. இதில் எஸ்பிஜி பாதுகாப்பு பிரதமருக்கு மட்டும் வழங்கப்பட்டு என்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது பிரதமருக்காக இருக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு ஆகும்.

அண்ணாமலைக்கு இசட் பிரிவு
அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் அவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பிரச்சனை, அவர்கள் உயிருக்கு இருக்கும் ஆபத்துகள் உள்ளிட்ட விஷயங்களை வைத்து அவர்களுக்கு ஏற்ற பாதுகாப்பு வழங்கப்படுகிறது. யாருக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்கிறது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

33 பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள்
இதுநாள் வரை அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஒய் பிரிவு என்பது 1 அல்லது 2 கமாண்டோக்கள் மற்றும் போலீஸ் பணியாளர்கள் உட்பட 28 பணியாளர்கள் பாதுகாப்பு அளிப்பது ஆகும். இதுதான் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டு வந்தது. இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால் முதல் கட்டமாக 33 பாதுகாவலர்கள் அண்ணாமலைக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். அண்ணாமலைக்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருக்க கூடாது என்று இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

எனக்கு நெருடல் மாதிரிதான்
தனக்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிரிவு பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை இது தனக்கு ஒரு நெருடலாக உள்ளது என்றார். நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அண்ணாமலை இது தொடர்பாக கூறியதாவது:- இந்த பாதுகாப்பு என்பதே எதோ ஒரு விதத்தில் எனக்கு நெருடல் மாதிரிதான். நான் வந்தால் தொண்டர்கள் கை கொடுப்பாங்க.. போட்டோ எடுப்பாங்க.. கொஞ்சம் ரிலாக்சா போகனும். திடீர் திடீரென புரோகிராமை மாற்றி ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு போவோம்.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன்
இந்த மாதிரி பாதுகாப்பு வரும் போது நிறைய கட்டுப்பாடுகளுடன் வருகிறது. அதுவும் இப்போ கொடுக்கப்பட்டு இருக்கும் இந்த பாதுகாப்பு இந்தியாவிலேயே குறைவாக சிலருக்குதான் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த பாதுகாப்பு வருகிறது. பயணம் செய்வதற்கு முன்பாகவே சொல்ல வேண்டும். 48 மணி நேரத்திற்கு முன்னாடி தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு அங்கே போகவேண்டும்.

என்னுடைய கடமை
இது எல்லாம் கட்டுப்பாடுகளாக நான் பார்க்கிறேன். ஆனால் வேறு வழியில்லை. அரசியலில் இருக்கிறோம். சில விஷயங்களில் ஆக்ரோஷமாக பேசுகிறோம். அதனால் எதிரிகளை சம்பாதிக்கிறோம். எனவே மத்திய அரசின் உளவுத்துறை ஆய்வு செய்து சொல்லும் போது அதை அசால்ட்டாக எடுக்காமல் தீவிரமாக எடுத்துக்கொள்வது என்னுடைய கடமை" என்றார்.












Click it and Unblock the Notifications