"மோசமான சாலையால் ஊழியரை இழந்துவிட்டோம்".. பெண் இன்ஜினியர் பலி.. Zoho சிஇஓ ஸ்ரீதர் வேம்பு வேதனை பதிவு
சென்னை: zoho ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் இன்ஜினியர் ஒருவர், சென்னை மதுரவாயல் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மோசமான சாலைப் பள்ளத்தால் எங்கள் ஊழியரை இழந்துவிட்டோம் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குண்டும், குழியுமாக இருக்கும் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையால் ஏராளமான விபத்துகள் நிகழ்ந்து வருவதாக பொதுமக்கள் சமூகவலைதளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

சாப்ட்வேர் இன்ஜினியர்
சென்னை போரூரை சேர்ந்தவர் ஷோபனா (22). பொறியியல் பட்டதாரியான இவர், ஊரப்பாக்கத்தை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள zoho ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தம்பி திருவேற்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, நேற்று அவரது தம்பி பள்ளிக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மரணப் பள்ளம்
இதனால் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த ஷோபனா, தனது தம்பியை பள்ளியில் விடுவதற்காக ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். இந்நிலையில், மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் சென்ற போது, அங்கிருந்த பெரிய சாலைப் பள்ளத்தில் ஷோபனாவின் ஸ்கூட்டர் இறங்கியதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த மணல் லாரி ஒன்று ஷோபனா மீது ஏறிவிட்டு நிற்காமல் சென்றது.

சம்பவ இடத்திலேயே பலி
இந்த கோர விபத்தில் ஷோபனா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தன் கண் முன்பே அக்காவின் உயிர் போனதை பார்த்த அவரது தம்பி கதறி அழுதது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. தகவலறிந்து அங்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீஸார், ஷோபனாவின் உடலை பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீதர் வேம்பு வேதனை பதிவு
இதனிடையே, ஷோபனா பணிபுரிந்து வந்த zoho நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு, இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எங்கள் பொறியாளர்களில் ஒருவரான ஷோபனா, சென்னை மதுரவாயல் அருகே உள்ள பெரிய சாலைப் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். மோசமான சாலையால் ஈடு செய்ய முடியாத இழப்பை ஷோபனாவின் குடும்பமும், zoho நிறுவனமும் சந்தித்துள்ளது" என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications