ராகுல்காந்திக்கு கல்யாணமாகல; அவரிடம் கவனமாயிருங்க மாணவிகளே.. வாய்க்கு வந்தபடி பேசிய கம்யூ. நிர்வாகி
கொச்சி: ராகுல் காந்தி திருமணமாகாதவர். அவரிடம் மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண் டும் என்று கேரளாவில் கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகி ஜாய்ஸ் ஜார்ஜ் கூறியதால் சர்ச்சை வெடித்தது.
பல்வறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்ததால், ''தவறு செய்து விட்டேன், கருத்துக்காக மன்னிப்பு கேட்கிறேன்'' என்று ஜாய்ஸ் ஜார்ஜ் கூறினார்.
கேரளாவில் தேர்தல்
கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு ஆளும் கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கூட்டணி ஒரு அணியாக களம் இறங்குகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) கூட்டணி எதிர் அணியாக களம் காண்கிறது. கேரளாவில் ஏதாவது அதிசயம் நிகழத்த வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க.வும் கோதாவில் குதித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி
வாக்கு பதிவுக்கு நாட்கள் குறைவாகவே இருப்பதால் கேரளாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, பாஜக என அனைத்து தரப்பினரும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் இடுக்கியில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய இடுக்கி முன்னாள் எம்.பி.யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகியுமான ஜாய்ஸ் ஜார்ஜ் பேச்சு அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
வாய்க்கு வந்தபடி பேசிய ஜாய்ஸ் ஜார்ஜ்
கூட்டத்தில் பேசிய ஜாய்ஸ் ஜார்ஜ்,' காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மகளிர் கல்லூரிகளுக்கு மட்டுமே செல்வது ஏன்? அந்த கல்லூரிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பாடம் நடத்துவது ஏன்? மாணவிகளுக்கு நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். ராகுல் காந்தி திருமணமாகாதவர். அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண் டும். அவர் முன்பாக குனிந்து, நிமிர வேண்டாம்" என்று வாய்க்கு வந்தபடி பேசினார் ஜாய்ஸ் ஜார்ஜ்.
பினராயி விஜயன் கண்டனம்
ஜாய்ஸ் ஜார்ஜின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. ராகுல் காந்தியை அவமரியாதையாக பேசிய ஜாய்ஸ் ஜார்ஜை கைது செய்ய வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறினார். இதேபோல் இடதுசாரி கட்சியை சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜாய்ஸ் ஜார்ஜ் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது என்று விளக்கினார்.
மன்னிப்பு கோரிய ஜார்ஜ்
பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளப்பி வந்ததால் ஜாய்ஸ் ஜார்ஜ் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார். ''நான் தவறு செய்துவிட்டேன். எனது கருத்துக்காக பகிரங்க மாக மன்னிப்பு கோருகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.