திமுக போஸ்டரை கிழிக்க முயன்ற பாஜக.. போலீசாருடன் தள்ளுமுள்ளு.. நள்ளிரவில் கோவையில் பரபரப்பு!
கோவை: கோவை கொடீசியா அருகே மேம்பால தூண்களில் போஸ்டர் ஒட்ட அனுமதிகோரி பாஜக நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் நாளொரு போராட்டம், பொழுதொரு ஆர்ப்பாட்டம் என்று ஆளுங்கட்சிக்கு எதிராக பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு, மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் செயல்பாடு என்று பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் திமுகவுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருவதாக விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் கொடீசியா அருகே உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பிரம்மாண்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த பிரம்மாண்ட தூண்களில் அரசியல் கட்சியினர் போஸ்டர், பேனர் ஒட்டுவது வழக்கம். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அந்த தூண்களில் திமுக தரப்பில் பேனர் மற்றும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பாஜக தரப்பிலும், தங்களது போஸ்டர் மற்றும் பேனர்களை ஒட்ட வேண்டும் என்று காவல்துறையினரிடம் அனுமது கேட்டுள்ளனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் விரக்தியடைந்த பாஜகவினர், தூண்களில் உள்ள திமுகவினரின் போஸ்டரை அகற்ற வேண்டும். இல்லையென்றால் தாங்களும் போஸ்டர் ஒட்டுவோம் என்று பாஜகவினர் கூறியுள்ளனர்.
இதனிடையே மேம்பால தூண்களில் போஸ்டர் ஒட்ட அனுமதி வேண்டும் என்று கூறி கொட்டீசியா அருகே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து காவல்துறையினர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனிடையே திமுகவினர் ஒட்டிய போஸ்டர் மற்றும் பேனரை கிழிக்கும் செயல்களில் பாஜகவினர் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்ய முற்பட்டபோது, இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் பாஜகவைச் சேர்ந்த 30 பேரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

Recommended Video
ஆனால் போலீசார் வாகனத்தை மறித்த பாஜகவினர், காவல் தடுப்புகளை எடுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக தலைவர் சம்பவ இடத்திற்கு வந்து பாஜகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருந்தும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.












Click it and Unblock the Notifications