அன்னூரில் கடையை திறந்த அவ்வளவுதான்!கடைகடையாய் மிரட்டிய பாஜகவினர்! மொத்தமாய் அள்ளிச் சென்ற காவல்துறை!
கோவை : கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள கடைவீதிகளில் கடைகளை திறக்க கூடாது என கூறி வலம் வந்ததாக பாஜக மாவட்ட செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்துக்கள் குறித்து இழிவாக பேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் ராசாவை கண்டித்தும் அவரை எம்பி பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் கோவை மாவாட்டத்தில் இன்று கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவிக்குமாறு இந்து முன்னணி சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

கடை அடைப்பு
அதேபோல் திமுக சார்பில் கடைகளை வழக்கம் போல் திறக்கலாம் எந்தவித பயமும் தேவையில்லை காவல்துறை பாதுகாப்பு தரும் என துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்து நிலையம், கோவை சாலை, பகுதிகளில் ஹோட்டல் பேக்கரி ஜவுளிக்கடை உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

இந்து முன்னணி
அதேசமயம் மெடிக்கல்ஸ், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. சத்தியமங்கலம் வாரச்சந்தை வழக்கம்போல் செயல்பட்டது. கடையடைப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் என இரு நிலைகள் இருந்ததால் 100க் கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இடையே இடையே திமுகவின், இந்து முன்னணியினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

அன்னூரில் பரபரப்பு
இதேபோல் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உதகை, கூடலூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு செய்யப்படும் என இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. கடையடைப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் எந்த ஒரு குறிப்பிட்ட அமைப்பினரோ யாரையாவது வலுக்கட்டாயமாக தங்களது கடையை மூடும் படி கூறினால் காவல்துறைக்கு உடனே தகவல் தெரிவிக்கவும், அப்படி ஈடுபடும் அமைப்பினர் மீது காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது,

பாஜகவினர் கைது
இந்த நிலையில் அன்னூர் பகுதியில் சில கடைகள் திறக்கப்பட்டு இருந்த நிலையில் பாஜக வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட பாஜகவினர் பத்துக்கும் மேற்பட்டோர் அன்னூர் பகுதியில் உள்ள கடைவீதிகளை கடைகளை திறக்க கூடாது என கூறி வலம் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் ஜெயபால் உள்ளிட்ட 17 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கடைகளை திறக்கும் முயற்சியில் திமுக பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications