ஓசூர் வங்கி அதிகாரி நித்யாவுக்கு ஒரே எஸ்எம்எஸ்சில் வந்து விழுந்த 50 லட்சம்.. ஏமாந்த கோவை இளைஞர்
கோவை: கோவை கணபதி கே.ஆர்.ஜி.நகரை சேர்ந்த ஜோஜூ மேத்யூ என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்த எஸ்எம்எஸ்க்கு பின்னர் அவருக்கு 50 லட்சம் பறிபோனது. இந்த மோசடி செய்த வழக்கில் வங்கி பெண் அதிகாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து செல்போன், ஏ.டி.எம். கார்டு உள்பட 129 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை கணபதி கே.ஆர்.ஜி.நகரை சேர்ந்த 51 வயதாகும் ஜோஜூ மேத்யூ என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய செல்போனுக்கு சம்பவம் நடந்த அன்று குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. உடனே அதில் இருந்த எண்ணுக்கு ஜோஜூ மேத்யூ தொடர்பு கொண்டார்.

அப்போது மறுமுனையில் பேசிய நபர், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகமாக லாபம் பெறலாம் என்று கூறினார். அதை நம்பிய அவர் முதலீடு செய்ய சம்மதித்தார். உடனே ஜோஜூ மேத்யூக்கு செல்போன் செயலியின் ஐ.டி. மற்றும் ரகசிய எண் கொடுக்கப்பட்டது. அதில் அவர் பல்வேறு தவணைகளாக ரூ.50 லட்சம் முதலீடு செய்திருக்கிறாராம்.
அவர் ஒவ்வொரு முறையும் முதலீடு செய்த போதும் லாபத் தொகை சேர்க்கப்பட்டதாக ஆப்பில் காட்டியது. அவர் அந்த பணத்தை தனது வங்கி கணக்குக்கு மாற்ற முயன்ற போது முடியவில்லை. அப்போது ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சிவக்குமார் (27), ஓசூரை சேர்ந்த குமரேசன் (29), ஓசூர் கரப்பள்ளியை சேர்ந்த நித்யா (32) ஆகிய 3 பேர் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் ஓசூரைச் சேர்ந்த நித்யா தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்த 3 பேரும் சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்துவது போல் ஜோஜூ மேத்யூவிடம் பேசி ரூ.50 லட்சம் மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், 9 சிம்கார்டு, 25 ஏ.டி.எம். கார்டுகள், 23 வங்கி கணக்கு புத்தகம், 62 காசோலை புத்தகம் உள்பட 129 பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து கோவை போலீசார் கூறும்போது, கைதான 3 பேரும் சேர்ந்து பலரிடம் பேசி பணத்தை வசூல் செய்து கம்போடியாவில் இருக்கும் நபருக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது. 3 பேரும் மொத்தம் ரூ.90 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று கூறினார்கள்.
ஆன்லைனில் முதலீடு செய்தால் லாபம் வரும் என்று யாராவது எஸ்எம்எஸ் அனுப்பினால் எந்த காரணம் கொண்டு நம்பிவிட வேண்டாம். ஆப்பில் அதிக பணம் சேர்ந்ததாக கூட நண்பர்கள், உறவினர்கள் சொல்வார்கள்.. கண்முன்னே பணம் எவ்வளவு உயர்ந்துள்ளது பாருங்கள் என்று ஆப்பில் காட்டுவார்கள்.. அதனை உண்மை என்று நம்ப வேண்டாம். அப்படி ஆப்பில் காட்டும் பணத்தை உங்களால் வங்கி கணக்குக்கு மாற்றவே முடியாது.. அப்போது தான் இது ஏமாற்று வேலை என்பது தெரியும்.இப்படி பலர் தற்போது ஏமாந்து வருகிறார்கள். ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாத எந்த முதலீட்டு நிறுவனத்திலும் முதலீடு செய்ய வேண்டாம். ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ நிறுவனங்களிடம் தான் பணம் தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.. இல்லாவிட்டால் ஏமாறுவது நடக்கும்.












Click it and Unblock the Notifications