கோவையில் பத்திரிகையாளரை கைதடியால் நெஞ்சு, கழுத்து பகுதியில் நெட்டித்தள்ளிய கமல்ஹாசன்- கடும் கண்டனம்
கோவை: கோவையில் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே பத்திரிகையாளர் ஒருவரை தமது கைதடியால் கழுத்து, நெஞ்சு பகுதியில் நடிகர் கமல்ஹாசன் நெட்டித் தள்ளியதற்கு கோவை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவையில் கமல்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிற்கு முன்பிருந்தே, தொடர்ந்து கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் கோவையில் பணியாற்றும், செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும், எந்தவிதமான மாற்றுக்கருத்துமின்றி, செய்தியாகப் பதிவு செய்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், இன்று காலை, கோவை அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிட வந்தார் கமல்ஹாசன்.
தடுத்து தள்ளிய கமல்
அப்போது செய்திக்காக, மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனால் அவரைப் படம் எடுக்கக் கூடாது என மிரட்டும் நோக்கில், தனது கையிலிருந்த கைத்தடியால் கழுத்து மற்றும் நெஞ்சுப்பகுதியில் கமல் நெட்டித் தள்ளியிருக்கிறார்.
விபரீதமாகி இருக்கும்
நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் மோகனுக்கு பெரிய அளவில் காயமில்லை என்ற போதும், ஒருவேளை கைத்தடியின் முனை தவறிப்போய்க் கழுத்தை பதம் பார்த்திருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும். இதெல்லாம் கமல் அறியாதவர் அல்ல என்றாலும், அவரது சினிமா பின்புலத்தில், நடிப்பாக அவர் பார்ப்பாரேயானால், அவருக்கு ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும்.
எச்சரிக்கை
இது உங்கள் நடிப்பல்ல, உயிர் தொடர்பான பிரச்சனை கமல் அவர்களே. செய்தியாளர் என்று தெரிந்திருந்தும், நீங்கள் இதைச் செய்திருப்பது, கோவை செய்தியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது சந்தர்ப்பவாதம் மற்றும் அதிகார போக்கின் உச்சக்கட்டம் என்றே கருத வேண்டியிருக்கிறது. நிச்சயம் இதற்கான சட்டரீதியான எதிர்வினையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறோம்.
இதுதான் நிஜமுகமா?
பொதுவாழ்விற்கு வந்துவிட்ட நீங்கள் முதலில் நடிகன் என்கிற அந்நிய உணர்வையும், விட்டொழித்துவிட்டு, கள யதார்த்தம் அறிந்தவராக மாற வேண்டும். இதுதான் உங்கள் நிஜமுகமா கமல்ஹாசன் அவர்களே? இவ்வாறு கோவை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.